சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு நல்லதா, கெட்டதா?
சென்னை: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்து நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த முதலீடு நம் நாட்டிற்கு நல்லதா, இல்லையா என்று ஒரு பார்வை.
சிங்கிள் பிராண்ட் ரீடைல்...
ஏற்கனவே ஒற்றை பிராண்ட் கொண்ட ரீடைல் கடைகளுக்கு (single brand retail) மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது. அதாவது, ரீபோக் ஷூ நிறுவனம் தானே முழு முதலீட்டையும் போட்டு இந்தியாவில் எத்தனை கடைகளை வேண்டுமானாலும் திறக்கலாம். எவ்வளவு அன்னிய முதலீடு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ரீபோக் பிராண்டை மட்டுமே விற்க வேண்டும். இது தான் single brand retail. இதை பாஜக உள்பட எந்தக் கட்சியும், வர்த்தகர்களும் எதிர்க்கவில்லை.
மல்டி பிராண்ட் என்றால் என்ன?
ஆனால், அதுவே மல்டி பிராண்ட் என்று வரும்போது தான் சிக்கல் எழுந்துள்ளது. வால்மார்ட், டெஸ்கோ, கேர்போர் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது முதலீட்டைப் (அன்னிய முதலீடு) போட்டு மாபெரும் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இங்கே ரீபோக் மாதிரி எல்லா பிராண்ட் பொருட்களையும், டிவியில் இருந்து எலுமிச்சம் பழம் வரை எல்லா பொருட்களையும் விற்க அனுமதி உண்டு. இதற்குத் தான் வர்த்தகர்கள் இடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உள்ளூர் கடைகள் காணாமல் போகும் பயம்:
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தால் தெருவோரம் கடை போட்டிருப்பவர்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்று பலர் அஞ்சுகின்றனர். காரணம், வால்மார்ட் போன்ற கடைகளில் வியாபாராம் பல மடங்கு இருக்கும் என்பதால் லாபத்தை குறைவாக வைத்து விற்பார்கள். இதனால் தங்களது கடைகளுக்கு மக்கள் வரமாட்டார்கள் என கடைக்காரர்கள் அஞ்சுகின்றனர்.
வேலைவாய்ப்பின்மை பயம்:
எப்.டி.ஐ.யை அனுமதித்தால் பலர் வேலையை இழந்து தவிப்பார்கள் என்று மக்கள் பயப்படுகிறார்கள். அதாவது சிறிய கடைகளை மூடும் நிலை ஏற்படும், இதனால் அந்தக் கடைகளில் வேலை பார்ப்பவர்கள் வேலை இழப்பார்கள் என்கிறார்கள். பிக்பஜார், ஸ்டார் பஜார், ஸ்பென்சர்ஸ் போன்ற கடைகள் வந்ததால் அருகே இருந்த சிறிய கடைகள் இல்லாமலா போய்விட்டன?.
விவசாயிகளுக்கு பாதிப்பு
பெரிய வர்த்தக நிறுவனங்கள் வந்துவி்ட்டால் அவர்கள் மற்றவர்களை விட மிகக் குறைந்த விலைக்கு பொருட்களை விற்பார்கள். இதனால் விவசாயிகளிடம் இருந்து பொருட்களை குறைந்த விலைக்கே வாங்குவார்கள். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்ற பயம். ஆனால், இவர்களுக்கு குறைந்த விலைக்கு விவசாயிகள் ஏன் விற்க வேண்டும். அதிக விலை கொடுப்பவர்களிடம் விற்க வேண்டியது தானே என்பது எப்டிஐயை ஆதரிப்போரின் வாதம்.
எதிர்ப்பாளர்களிடம் வாதம்...
ஆனால், விவசாயிகளிடம் ஆரம்பத்தில் அதிக விலை தந்து மொத்தமாக கொள்முதல் செய்து பின்னர் அவர்களை தங்களது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விலையைக் குறைத்து அவர்களை நசுக்கிவிடுவார்கள் என்பது எதிர்ப்பாளர்களிடம் வாதம்
உணவுப் பொருட்கள் வீணாகாது:
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தால் உணவுப் பொருட்கள் வீணாவது குறையும். காரணம் பெரிய நிறுவனங்கள் உணவுப் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து மாபெரும் குளிர்பதனக் கிட்டங்களில் சேமித்து வைத்து விற்பார்கள். இதனால் விவசாயிகளுக்கு காய்கறிகள், பழங்கள் அழுகுவதால் ஏற்படும் நஷ்டம் குறையும். தற்போது ஆண்டுக்கு ரூ.55,000 கோடி மதிப்புள்ள காய்கறி, பழங்கள் அழுகி இழப்பு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இடைத்தரகர்கள் தொல்லை இருக்காது:
எப்.டி.ஐ. வந்துவிட்டால் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் இடைத்தரகர்கள் தொல்லை இருக்காது. விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெரு நிறுவனங்களே அதை கொள்முதல் செய்து மக்களுக்கு நேரடியாக விற்பார்கள். இதனால் பழக் கமிஷன் மண்டி, பருப்பு மண்டி என்ற பெயரில் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் இடையே புகுந்து கமிஷன் கொள்ளை அடித்து விலையை பல மடங்கு உயர்த்திவிடும் இடைத் தரகர்கள் ஒழிவர். இதனால் தங்கள் பொருட்களுக்கு விவசாயிகள் நல்ல விலை பெறுவர். மக்களுக்கும் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும்.
வேலைவாய்ப்பு அதிகரிக்கும்:
எப்.டி.ஐயை அனுமதித்தால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும். பல்லாயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் நாட்டுக்குள் வரும்போது அவை நிச்சயமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
நுகர்வோருக்கு நியாய விலையில் பொருட்கள்:
எப்.டி.ஐ. வந்தால் பொருட்களின் விலை வெகுவாகக் குறையும். அதனால் நுகர்வோர் பயனடைவர்.