எப்.டி.ஐ. வாக்கெடுப்பு: சிபிஐ மூலம் முலாயம், மாயாவதியை அடக்கிய மத்திய அரசு?
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்த வாக்கெடுப்பின்போது சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் காங்கிரஸின் திரைக்கதைப்படி லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தன. அவர்கள் வெளிநடப்பு செய்ததால் அரசு வாக்கெடுப்பை எளிதில் வென்றது. மத்திய அரசின் இந்த திட்டத்தை எதிர்க்கும் போதிலும் இந்த 2 கட்சிகளை காங்கிரஸ் எப்படித் தான் தன் பிடியில் வைத்துள்ளதோ என்று எதிர்கட்சிகள் வியக்கின்றன.
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த தாரா சிங் சவுகானும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக ஆக்ரோஷமாகப் பேசிவிட்டு வாக்கெடுப்பு நேரத்தில் நைசாக ஜகா வாங்கிவிட்டனர். முலாயம் மற்றும் மாயாவதி மீது உள்ள ஊழல் வழக்குகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் இந்த விசாரணையில் மத்திய அரசின் தலையீடு உள்ளது என்று கூறப்படுகிறது.
அப்படி இருக்கையில் அவர்கள் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தால் அவர்களுக்கு எதிராக சிபிஐ திரும்பும் என்ற பயத்தில் தான் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன என்று கூறப்படுகிறது.
வாக்கெடுப்புக்கு சற்று நேரத்திற்கு முன்பு பேசிய எதிர்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், முலாயம் மற்றும் மாயாவதிக்கு எப்.டி.ஐ. அல்லது சிபிஐ என்ற ஆப்ஷனை மத்திய அரசு அளித்துள்ளது என்று பகிரங்கமாக தெரிவித்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் ராஜீவ் ஷிக்லா மறுத்தார். பாஜக ஆட்சியில் இருக்கையில் சிபிஐயை தங்களுக்கு ஏற்றவாறு ஆட வைத்தார்கள் என்பது தான் இதற்கு அர்த்தம். அதை அவர்கள் ஒப்புக்கொள்வார்களா? சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாடி கட்சிகள் மீது குற்றச்சாட்டை சுமத்தும் முன்பு அவர்கள் இருமுறை யோச்சித்திருக்க வேண்டும் என்றார் ஷுக்லா.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி முதன்முதலாக மத்தியில் ஆட்சியைப் பிடித்தபோது காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அப்போதைய உத்தர பிரதேச முதல்வர் மாயாவதியையும், பின்னர் முலாயம் சிங் யாதவையும் தனது பிரச்சாரக் கூட்டங்களில் விலாசித் தள்ளினார். அப்படி இருந்தும் மாயாவதியும், முலாயமும் காங்கிரஸுக்கு ஆதரவாக உள்ளனர்.
முன்னதாக ஜனாதிபதி தேர்தல் மற்றும் எப்.டி.ஐ. விவகாரம் தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகியபோதும் இந்த இருவரும் காங்கிரஸின் பக்கம் தான் இருந்தனர். மாயாவதியும், முலாயமும் எலியும், பூனையுமாக இருந்தாலும் இருவரும் ஒற்றுமையாக காங்கிரஸை ஆதரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.