பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்… பலாத்கார வழக்கு விரைந்து முடிக்கப்படும்: ஷிண்டே
டெல்லியில் கடந்த ஞாயிறன்று ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் மாநிலங்களவையில் பெரும் புயலை கிளப்பியது. இது குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்த அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, நாட்டில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனைத்து வாதங்களும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்றும் உறுப்பினர்கள் அளித்த ஆலோசனைகளை ஏற்று, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டு அது அளிக்கும் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்படும் என்று கூறிய அமைச்சர், இரவு நேர பணியில் ஈடுபடும் பிபிஓ மற்றும் கால் செண்டர்கள் இருக்கும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். மேலும், பெண்களுக்கு அவசரத்துக்கு உதவ 3 தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் நான் நேரடியாக தலையிட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் ஷிண்டே உறுதியளித்தார்.