நாட்டிலேயே தமிழகக் காவல்துறைக்குத்தான் முதன்மை இடம்: ஜெயலலிதா பெருமிதம்
சென்னையில் கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு கடந்த 17-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று காவல்துறை அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்ட மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில்,
இந்தியாவிலேயே தமிழக காவல் துறைதான் பல்வேறு விஷயங்களில் முதன்மை இடத்தில் இருப்பதை நாம் பெருமையோடு சொல்லி கொள்ளலாம். 1992-ம் ஆண்டு நான் முதல்வர் பொறுப்பில் இருந்தபோதுதான் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கும் திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. 1994-ம் ஆண்டு என்னால் கடலோர பாதுகாப்பு படை தொடங்கப்பட்டது. 11 ஆண்டுகள் கழித்து இந்திய அரசு இதே போன்று திட்டம் தொடங்கி நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
2002-ம் ஆண்டு "அவசர விபத்து மீட்பு மையங்கள்'', 2003-ல் நெடுஞ்சாலைகளில் போலீசார் ரோந்து பணி, 2003-ம் ஆண்டு தமிழக காவல் துறையில் பாய்ஸ் கிளப் ஆகியவற்றையும் நானே தொடங்கி வைத்தேன். இந்த ஆண்டு போலீஸ் கேண்டீன்கள்,. போலீசாருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மருத்துவ உதவியில் பல்வேறு திட்டங்கள், போலீசாருக்கு "உங்கள் சொந்த இல்லம்'' பெயரில் 36 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டம் ஆகியவற்றை கொண்டுவந்திருக்கிறேன்.
சட்டசபையில் "தமிழ்நாடு காவல் துறையில் இளைஞர் படை'' உருவாக்கப்படும் என்று நான் அறிவித்தேன். திறமையான கட்டுப்பாடான காவல்துறையை நான் உருவாக்கி உள்ளேன். எனவே குற்றங்களை தடுக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், இங்கு வந்துள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்