பள்ளி அருகே போதைப் பொருட்கள் விற்கத் தடை: டி.எஸ்.பி வெள்ளைத்துரை அதிரடி
மானாமதுரை: மானாமதுரை,திருப்புவனம் வட்டாரங்களில் பள்ளிகள் அருகே போதைப்பொருட்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி. வெள்ளைத்துரை தெரிவித்துள்ளார்.
கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு பீடி,சிகரெட், பான்பராக், குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்ய தடை உள்ளது. ஆனால் இவற்றை யாரும் பின்பற்றுவதாக தெரியவில்லை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் சுற்றுவட்டார பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் போதை வஸ்துகளை பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. அவர்கள் ஒயிட்னர், பெயிண்ட் போன்றவற்றை நுகர்வதாகவும், வைகை ஆற்றின் நாணல் புதர்களுக்குள் மறைந்து சிகரெட், கஞ்சா உள்ளிட்டவைகளை பயன்படுத்துவதாகவும் தெரியவருகிறது.
போலீசாரின் நடவடிக்கையினால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாணவர்களிடையே குறைந்து போயிருந்த போதை வஸ்து பழக்கங்கள் தற்போது மீண்டும் தலைதூக்கி வருகிறது. போதைப் பொருட்களை நுகர்ந்துவிட்டு மயக்கநிலையிலேயே மாணவர்கள் பள்ளிக்கு வருவதாக ஆசிரியர்கள் புகார் கூறியுள்ளனர். இதனால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே பிரச்சினை உருவாகிறது.
இதனிடையே மானாமதுரை டி.எஸ்.பி வெள்ளைத்துரை, பள்ளி, கல்லூரிகளின் அருகில் போதைப்பொருட்களை விற்பனை செய்ய தடைவிதித்துள்ளார். பள்ளிகளில் இருந்து 100 மீட்டருக்கு அருகில் பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது
திங்கட்கிழமை முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications