கராத்தே, குங்பு, ஜூடோ, கத்துக்கங்க!: பெண்களுக்கு பீகார் முதல்வர் நிதிஷ் அறிவுரை
பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதன் துவக்க விழாவில் நிதிஷ்குமார் கலந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஈவ்டீசிங் செய்பவர்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஜூடோ, கராத்தே, டேக்வாண்டோ போன்ற தற்காப்புக் கலைகளை பெண்கள் கற்றுக்கொண்டு, தங்கள் உடற்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கல்வியுடன் தற்காப்பு கலைகளையும் கற்றுக்கொண்டால் பெண்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.
தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுகளில் தற்காப்பு கலைகளின் பல்வேறு வடிவங்கள் வெளிப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளிகளில் ஜூடோ மற்றும் கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது. இதன்மூலம் ஒரு லட்சம் பெண்கள் தங்கள் பள்ளிகளில் தற்காப்புக் கலைகளை கற்றுக்கொண்டனர் என்று நிதீஷ்குமார் தெரிவித்தார்.
நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் பீகார் முதல்வரின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.