ஆசிட் வீச்சில் அலங்கோலமாகி உதவியின்றி தவிக்கும் வினோதினி.. கண் திறக்குமா அரசுகள்!
சென்னை: எல்லோரும் டெல்லி பாலியல் பலாத்காரத்தைப் பற்றி மட்டுமே வாய் வலிக்கப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காதலை ஏற்க மறுத்த குற்றத்திற்காக ஆசிட் வீச்சிற்கு ஆளாகி வாழ்க்கையை இழந்து தவிக்கும் புதுச்சேரி வினோதினியின் அவல நிலை எந்த அரசாங்கத்தின் கண்ணுக்கும் தெரியவில்லை. பண வசதியின்றி பரிதவித்துக் கலங்கிப் போய் நிற்கிறார் வினோதினி.
காரைக்கால் நகரில் வசித்து வரும் ஜெயபால் என்பவரின் மகள் வினோதினி. சென்னையில் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் தீபாவளிக்கு வினோதினி ஊருக்கு சென்ற போது அவரை ஒருதலையாக காதலித்த சுரேஸ் என்ற கட்டிட தொழிலாளி, ஆசிட் ஊற்றி வினோதியின் முகத்தை சிதைத்து விட்டான்.
கண் நரம்புகள் பொசுங்கிப் போனதால் வினோதினியின் பார்வை பறிபோய்விட்டது. வாய் கோரமாக சேதமடைந்துள்ளது. வாய் வழியாக உணவு செலுத்த முடியாததால் மூக்கு வழியாக திரவ உணவு செலுத்தப்பட்டு வருகிறது. அதோடு அவரது முகம், மார்பு, அடிவயிறு, கை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சிதைந்த முகம்... எத்தனை ஆபரேஷன்
சிதைந்த முகத்தை சீரமைக்க பலவித ஆபரேசன்கள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் 6 மாதத்திற்கு தொடர்ந்து ஆபரேஷன் செய்யவேண்டி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு பணமின்றி தவிக்கிறார் காவலாளியாக பணிபுரிந்து வரும் வினோதினியின் தந்தை ஜெயபால்.
வருமானம் இல்லை, தவிக்கும் பெற்றோர்
வினோதினி சாப்ட்வேர் என்ஜினீயராக வேலைபார்த்த பின்னர் தான் வருமானம் வர ஆரம்பித்தது. அவர் ஆஸ்பத்திரியில் இருப்பதால் அந்த வருமானமும் நின்றுவிட்டது. சிகிச்சைக்கு பணம் இல்லாமல் பெற்றோர் தவிக்கின்றனர். அவருக்கு உதவுவதற்காக இந்தியன் வங்கியில் தனிகணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஓரளவு பணம் வந்துள்ளது. அதை வைத்து தான் செலவு செய்து வருகிறார்கள்.
இதுவரை 3 லட்சம் செலவு
வினோதினியின் சிகிச்சைக்காக இதுவரை ரூ.3 லட்சம் செலவாகி உள்ளது. ஆனாலும் இன்னும் 6 மாதம் சிகிச்சை அளிக்கவேண்டி இருப்பதால் அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள்.
தண்டனை வாங்கித் தாருங்கள்
இதனிடையே கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்குப்பின்னர் வினோதினி வாய்திறந்து பேசியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் நாராயணசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வினோதினியை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது மெதுவாக பேசிய வினோதினி, என் மீது ஆசிட் வீசியவனுக்கு தண்டனை வாங்கி கொடுங்கள் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். மேலும் வசதி இல்லாமல் தவிக்கும் எனக்கு உதவி செய்யுங்கள் என்றும் கோரியுள்ளார். இதற்கு அமைச்சர் நாராயணசாமியும் தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
அரசுகளின் கண் திறக்குமா?
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நடவடிக்கை கோரி போராட்டங்கள் வலுத்து வருகின்றன. டெல்லி பெண்ணிற்கு நேர்ந்த கொடூரத்தைப் போலத்தான் வினோதியின் நிலையும். ஆசிட் வீச்சில் வாழ்க்கையை இழந்து தவிக்கும் அந்த பெண்ணின் மருத்துவ செலவிற்கு அரசு நிதி உதவி அளிக்கவேண்டும் என்பது உறவினர்களின் கோரிக்கையாகும்.
கை கொடுத்த கனிமொழி...கண் மூடிக்கிடக்கும் புதுவை அரசு
காரைக்காலை சேர்ந்த ஒருசிலர் பண உதவி செய்துள்ளனர். கனிமொழி எம்.பி சார்பில் 25000 ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரி அரசு சார்பில் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பது இவர்களது ஆதங்கமாகும்.