உயிரை பறித்த புத்தாண்டு கொண்டாட்டம்... வாலிபரை வெட்டி கொன்ற கும்பல்; சாலை விபத்தில் ஒருவர் பலி
சென்னை: புத்தாண்டைக் கொண்டாடியபோது பழையைப் பகையைத் தீர்க்க ஒருவரை வெட்டிக் கொன்றுள்ளனர் சென்னையில்.
சென்னை வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்தவர் ரஞ்சித். 25 வயதான இவர் லோக்கல் தாதா ஆவார். பல வழக்குகள் இவர் மீது உள்ளன. கடந்த அக்டோபர் மாதம் இவருக்கும் சங்கர் என்பவருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் சங்கர் வெட்டப்பட்டார். ஆனால் உயிர் பிழைத்து விட்டார்.
இந்த சம்பவம் காரணமாக ரஞ்சித் மற்றும் அவரது கும்பல் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார் சங்கர்.
இந்த நிலையில் நேற்று இரவு பெரியார் நகர் ஹவுசிங் போர்டு மைதானத்தில் ரஞ்சித் தனது நண்பர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது சினிமா பாணியில் திடீரென ஒரு ஆட்டோ அங்கு படு வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் இறங்கியது. இதைப் பார்த்த ரஞ்சித்தும் அவரது கூட்டாளிகளும் அங்கிருந்து சிதறி ஓடினர். ஆனால் விடாத அக்கும்பல் ரஞ்சித் உள்ளிட்டோரை வெட்டத் துரத்தியது.
இதில் ரஞ்சித் சிக்கிக் கொண்டார். அவரை அக்கும்பல் சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில் ரஞ்சித் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மூழ்கினார். சிறிது நேரத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். ரஞ்சித் உடலை மீட்டனர்.
முன்விரோதம் காரணமாகவே இந்தக் கொலை நடந்திருப்பதாக போலீஸார் கருதுகிறார்கள்.
சாலை விபத்தில் ஒருவர் பலி
இதற்கிடையே, நேற்று இரவு கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
கொட்டிவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் போடுவதற்காக வாலிபர் ஒருவர் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மகாபலிபுரம் பகுதியில் இருந்து எதிரே வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் அந்த வாலிபர் தூக்கி வீசப்பட்டு பலியானார். அவர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை.
அடையாறு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமரன் விசாரணை நடத்தி வருகிறார். புத்தாண்டை கொண்டாடிவிட்டு வீடு திரும்பும் போது இவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சென்னை நகரில் நேற்று இரவு மெரீனா கடற்கரை, பெசன்ட் நகர் உள்பட அனைத்துக் கடற்கரைப் பகுதிகளிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன.












Click it and Unblock the Notifications