ஆரணி அருகே வேன்- மொபட் மோதி தீப்பிடித்து தந்தை-மகள் பலி
ஆரணி: ஆரணி அருகே மெபெட் மீது வேன் மோதியதில் மொபெட்டில் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப் பிடித்தது. இதில் வேனும் தீப் பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் மொபெட்டில் சென்ற தந்தையும் மகளும் உடல் கருகி பலியாகிவிட்டனர். இன்னொரு மகள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆரணி இரும்பேடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் நேற்றிரவு தனது மொபட்டில் மகள்கள் தீபா (12), மதுமிதா (10) ஆகியோருடன் மாமியார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். முள்ளிப்பட்டு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு அருகே மொபட் வந்து கொண்டிருந்தது.
அப்போது புத்தாண்டையொட்டி செய்யாறில் இருந்து திருவண்ணாமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்து விட்டு 15 பேர் வந்த வேனும், மொபட்டும் மோதிக்கொண்டன. இதில் மொபட் வேனுக்கு அடியில் சிக்கிக் கொண்டது.
வேன் மோதியதில் மொபட்டின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப் பிடித்துக் கொண்டது. அந்த வேனும் தீ பிடித்துக் கொண்டது. வேனில் இருந்தவர்கள் இறங்கி ஓடினர். ஆனால் மொபட்டில் சென்ற 3 பேரும் வேனுக்கு அடியில் சிக்கியதால் ஓடமுடியாமல் தீயில் மாட்டிக் கொண்டனர்.
பின்னர் ஆனந்தன் மட்டும் எழுந்து உடலில் எரியும் தீயுடன் ஓடினார். ஆனால் சிறிது நேரத்தில் உடல் முழுவதும் கருகி அந்த இடத்திலேயே இறந்தார். பொது மக்கள் மதுமிதாவையும், தீபாவையும் மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் மதுமிதா உடல் கருகி இறந்துவிட்டார்.
தீபா ஆபத்தான நிலையில் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செய்யப்பட்டாள். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவள் வேலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். தீபாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது.
வேனில் இருந்தவர்கள் 15 பேரும் கீழே இறங்கி தப்பி ஓடியதால் உயிர் தப்பியுள்ளனர். சம்பவம் தொடர்பாக வேன் டிரைவர் சந்திர சேகரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.