டெல்லி காவல் நிலையங்களில் இனி 2 பெண் எஸ்.ஐக்கள் இருப்பார்கள்!
டெல்லியில் ஓடும் பஸ்சில் நடந்த கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. அப்பெண் இப்போது மரணமடைந்து விட்டார். இந்த நிலையில் இனி வரும் காலத்தி்ல இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி நிர்வாகமும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் டெல்லி காவல் துறையும் எடுக்க ஆரம்பித்துள்ளன.
அதன்படி டெல்லியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், அதாவது 166 காவல் நிலையங்களிலும் பெண் போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. அதாவது இனிமேல் அங்கு 2 பெண் சப் இன்ஸ்பெக்டர்கள் இறுப்பார்கள். அதேபோல பெண் காவலர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தேவையான அளவுக்கு பெண் காவலர்களை நியமிப்பதற்காக பெண் காவலர் தேர்வும் விரைவில் நடத்தப்படவுள்ளது. அதேபோல தேவையான பெண் சப் இன்ஸ்பெக்டர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர். காவல் நிலையங்களில் பெண் காவலர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் காவல் நிலையத்தைத் தேடி பாதிக்கப்பட்ட பெண்கள் வருவதற்கு எளிதான வழி ஏற்படுத்தித் தரப்படும் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.