முறையான அனுமதியின்றி கட்டப்பட்ட பி.ஆர்.பி. கிரானைட் ஆலையின் 3 கட்டிடங்களுக்கு சீல்
மதுரை: பி.ஆர்.பி. கிரானைட் தொழிற்சாலையில் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்த 3 கட்டிடங்களுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள தெற்குத்தெரு கிராமத்தில் பி.ஆர்.பி. கிரானைட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் தொழிற்சாலை உள்ளது. கிரானைட் முறைகேடு தொடர்பாக இந்த ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் கிரானைட் கற்களுக்கு பாலிஷ் போடும் இந்த தொழிற்சாலையில் முறையான அனுமதியின்றி 3 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக மாவட்ட நகர்நல அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதையடுத்து மாவட்ட நகர்நல அலுவலர் மற்றும் அதிகாரிகள் அந்த ஆலைக்கு சென்று ஆய்வு செய்தனர். ஆலையில் உள்ள கட்டிடங்களுக்கான ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது அங்கு கட்டப்பட்டிருந்த 3 கட்டிங்களுக்கு முறையான அனுமதி பெறாதது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 3 கட்டிடங்களுமே 4 அடுக்கு மாடி கொண்டவை.
முறையான அனுமதி இல்லாததால் அதிகாரிகள் அந்த 3 கட்டிடங்களுக்கும் சீல் வைத்தனர். சீல் வைத்த அதிகாரிகள் குழுவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.