மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய மாட்டேன்: கோர்ட்டில் நித்யானந்தா பதில் மனு
மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதில் இருந்து மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்த நியமனத்தை எதிர்த்து பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில் மதுரை ஆதீனம் திடீரென நித்யானந்தாவை இளைய ஆதீனம் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
பின்னர் நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய தடைவிதிக்கக் கோரி அருணகிரிநாதர் மதுரை மாவட்ட சப்-கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய நித்யானந்தாவுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து நித்யானதா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
என்னை மதுரை இளைய ஆதீனமாக நியமித்தது மரபுப்படி சரியான செயல் தான். ஆதீன மடத்திற்குள் நானும், எனது ஆதரவாளர்களும் நுழைய மாட்டோம். எந்த தொந்தரவும் எங்களால் ஏற்படாது. எனவே, மதுரை ஆதீனத்தின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு அருணகிரிநாதருக்கு நீதிபதி குருவையா உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை ஜனவரி 8ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.