அல் கொய்தா தலைவர் ஜவாகிரியின் சகோதரர் சிரியாவில் கைது
ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பிறகு அந்த இயக்கத்தின் இரண்டாவது மட்டத் தலைவராக இருந்த ஜவாகிரி தான் இப்போது அதன் தலைவராக உள்ளார். அவரை அமெரிக்கப் படைகள் தொடர்ந்து தேடி வருகின்றன.
இந் நிலையில் அவரது சகோதரர் முகம்மத் அல் ஜவாகிரி சிரியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். சிரியாவின் ஆட்சியில் உள்ள அதிபர் பஸர் அல் அசாதுக்கு எதிராக கடந்த இரு ஆண்டுகளாக புரட்சி நடந்து வருகிறது.
இதை அமெரிக்கா ஆதரித்து வருகிறது. அசாதுக்கு எதிரான புரட்சிப் படைகளுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் நிதி உதவியும் ஆயுத உதவியும் வழங்கி வருகின்றன. இவர் ஷியா பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் இவருக்கு எதிரான போராட்டத்தை செளதி அரேபியாவும் ஆதரித்து வருகிறது.
இந் நிலையில் அதிபருக்கு எதிரான புரட்சிப் படைகளுக்கு உதவி செய்ததாக ஜவாகிரியின் சகோதரர் முகம்மத் அல் ஜவாகிரியை சிரிய நாட்டுப் படைகள் கைது செய்துள்ளன.
தலைநகர் டமாஸ்கசுக்கு அருகே உள்ள தர்யா என்ற இடத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால், இவர் தீவிரவாதத்துடனோ அல் கொய்தாவுடனோ தொடர்பே இல்லாதவர் என்றும், புரட்சிப் படைகளுடனும் தொடர்பு இல்லாதவர் என்றும், சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவே அவர் வந்ததாகவும் முகம்மத் அல் ஜவாகிரியின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
59 வயதான இவர் 15 ஆண்டுகள் எகிப்தில் சிறையில் இருந்துவிட்டு ஓராண்டுக்கு முன்னர் தான் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1981ம் ஆண்டு எகிப்து அதிபராக இருந்த அன்வர் சதாத் கொலை வழக்கு உள்பட, பல்வேறு தீவிரவாத செயல்களுக்காக இவர் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அந்த தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
இந் நிலையில் எகிப்தில் புரட்சி ஏற்பட்டு கடந்த 2011ம் ஆண்டு அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகி, புதிய அரசு பதவியேற்றதும் இவரை விடுவித்தது.
15 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்த ஜவாகிரி எகிப்திலேயே தங்கியிருந்தார். இந் நிலையில் சில நாட்களுக்கு முன் சிரியாவுக்கு வந்து புரட்சியாளர்களுக்கு உதவ முயன்ற நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.