இங்கிலாந்தில் இந்திய மாணவன் மாயம்: மத்திய அரசிடம் உதவி கேட்கும் தாய்
பெங்களூரைச் சேர்ந்தவர் சௌவிக் பால்(19). அவர் மான்செஸ்டர் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தில் புராடெக்ட் டிசைன் இளநிலை பட்டம் படிக்க கடந்த மூன்றரை மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து சென்றார். கடந்த மாதம் 31ம் தேதி மாலை அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து புத்தாண்டை கொண்டாட அருகில் உள்ள பப் ஒன்றுக்கு சென்றுள்ளார். இரவு 10.30 மணி அளவில் கழிவறைக்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்ற பால் வெகுநேரமாகியும் திரும்பவில்லை. இந்நிலையில் இரவு 11 மணிக்கு அவரது நண்பருக்கு தான் பப்புக்கு வெளியே இருப்பதாக எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து குழம்பிய அவரது நண்பர் காமா பப்பில் இருந்து வீட்டுக்கு சென்றுவிட்டார். காலை 5 மணி ஆகியும் பால் வீட்டுக்கு வராததால் அவர் போலீசில் இது குறித்து புகார் செய்தார்.
சௌவிக் புத்தாண்டு அன்று தனது தந்தை சாந்தனு பாலுக்கு போன் செய்து வாழ்த்தி உள்ளார். ஆனால் அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. பப்பில் உள்ள சிசிடிவி கேமராவில் பால் டிசம்பர் 31ம் தேதி இரவு 11 மணிக்கு பப்பில் இருந்து வெளியேறி இருட்டில் நடப்பது பதிவாகியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த இங்கிலாந்து போலீசார் பாலை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே பெங்களூரில் தனது இளைய மகனுடன் வசிக்கும் பாலின் தாய் மஹுயா பால் காணாமல் போன தனது மூத்த மகனை கண்டுபிடிக்க உதவுமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
பாலின் குடும்பத்தார் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் வந்து செட்டிலாகிவிட்டனர். பாலின் தந்தை மேற்கு ஆசியாவில் பணிபுரிகிறார். தனது மகன் காணாமல் போனது குறித்த அவர் உடனே மான்செஸ்டருக்கு விரைந்தார்.