தமிழகத்தில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி; ஆடு, மாடுகளுக்கு கூட தீனி இல்லை: வைகோ
சென்னை: பத்தாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சியை விட, தமிழகத்தில் இந்த ஆண்டு பெரும்பாலான இடங்களில் மிகக் கடுமையான வறட்சி ஏற்பட்டு ஆடு, மாடுகளுக்கு தீனியும், குடிநீரும் இல்லாமல் போய்விட்டது. அடுத்த இரண்டு மாதத்தில் நிலைமை படுமோசமாகிவிடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு விவசாயிகள் நிலைமை இந்த ஆண்டு கொடும் துயரமாகிவிட்டது. தமிழகத்தின் பல பகுதிகளில் பருவமழை பொய்த்ததால் கடுமையான வறட்சி ஏற்பட்டு, கடன் வாங்கி முதலீடு செய்து செலவழித்த பின்னர் பயிர்கள் அனைத்துமே கருகிப் போய்விட்ட வேதனையில் தவிக்கிறான் விவசாயி.
நெல் விளையவில்லை, மக்காச் சோளம், உளுந்து உள்ளிட்ட பயிர்களில் விளைச்சல் கண்டு இந்த ஆண்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று விவசாயி நினைத்ததற்கு மாறாக, மகசூலே இல்லாமல் எல்லாம் மண்ணாகிப் போய்விட்டது.
இன்னும் பல பகுதிகளில் விவசாயிகள் விவசாயத்திற்கு முதலீடு செய்வதற்கும் வழியின்றி, மழையும் தண்ணீர் இன்றி நிலங்களை தரிசாகப் போட்டு விட்டார்கள். காவிரி டெல்டா பகுதியில் பெரும் நஷ்டத்துக்கும், அல்லலுக்கும் ஆளான விவசாயிகளுக்கு, பயிர் வைத்த நிலங்களில் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாயும், விவசாயம் செய்ய முடியாத நிலங்களில் ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாயும் மாநில அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
அது போலவே, தமிழகமெங்கும் இப்படிப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் வைத்து அது கருகிப் போன விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரமும், விவசாயம் செய்ய முடியாத நிலைமைக்கு ஆளானவர்களுக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும்.
பத்தாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சியை விட, தமிழகத்தில் இந்த ஆண்டு பெரும்பாலான இடங்களில் மிகக் கடுமையான வறட்சி ஏற்பட்டு ஆடு, மாடுகளுக்கு தீனியும், குடிநீரும் இல்லாமல் போய்விட்டது. அடுத்த இரண்டு மாதத்தில் நிலைமை படுமோசமாகிவிடும்.
எனவே, தமிழக அரசு விவசாயக் குடும்பங்களைக் காப்பாற்றுவதற்கு அனைவருக்கும் நிவாரணம் வழங்க முன்வர வேண்டும். அனைத்துப் பிரச்சினைகளிலும் தமிழகத்துக்கு வஞ்சகம் செய்து வரும் மத்திய அரசு, தமிழ் நாட்டில் நிலவுகிற இந்த அசாதாரணமான வறட்சியை கருத்தில் கொண்டு, மாநில அரசுக்கு விவசாயிகளுக்கு தருவதற்கான நிவாரணத் தொகை வழங்க முன் வர வேண்டும்.
விவசாயிகளின் மென்னியைப்பிடித்து நெருக்கும் விதத்தில் வாட்டுகின்ற கூட்டுறவுக் கடன்கள், பயிர் கடன்கள் அனைத்தையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். தேசிய வங்கிகளில் பெற்ற கடன்களை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்.
உழுது, உணவை விளைவித்து நாட்டு மக்களின் பசி போக்கிய விவசாயிகளுக்கு நேர்ந்துள்ள தாங்க முடியாத இந்தத் துன்பத்தில் இருந்து அவர்களை பாதுகாக்க மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.
இவரும் தா.பாண்டியன் மாதிரி மத்திய அரசை மட்டுமே திட்றாரே.. மாநில அரசுக்கு வலிக்காமல் கோரிக்கை வைக்கிறாரே.. அதிமுக கூட்டணிக்கு துண்டை போடுகிறாராரோ?..