’ஆம்னிகளின்’ கட்டண வேட்டை.. பரிதவித்த பயணிகள்! பாய்ந்தது நடவடிக்கை!!
தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு ஆயிரக்கணக்கான சிறப்புப் பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது. இருப்பினும் மக்கள் கூட்டம் அலைமோதுவால் அப்படியே ஆம்னி பேருந்துகளை எட்டிப் பார்க்க வேண்டியிருக்கிறது. இதை சாதகமாக்கிக் கொள்ளும் 'ஆம்னி' புரோக்கர்கள் இஸ்டத்துக்கு டிக்கெட் விலையை உயர்த்திவிட்டு கமிஷன் பெற்றுக் கொள்கின்றனர்.
சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு போக ஏ.சி. படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்தில் ரூ1200ம் ஏ.சி. இல்லாத பேருந்தில் ரூ600ம் வசூலிக்கப்படும். ஆனால் நேற்று வசூலிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு தெரியுமா? ஏ.சி. பேருந்துக்கு ரூ1800! ஏ.சி. இல்லாத பேருந்துக்கு ரூ1200!! இதே நிலைமைதான் திருச்சி, மதுரை, திண்டுக்கல் செல்லும் கட்டணமும் மயக்கம் போட வைக்கிறது! சராசரியாக ரூ500 முதல் ரூ700 வரை வழக்கமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அரசு சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை அமைத்து இருந்தாலும் பொதுமக்கள் அட்ஜெஸ் செய்து பயணத்தைத் தொடர்கின்றனர். பொறுக்கமுடியாதவர்கள் பொங்கி எழுந்து 'பொங்கல்' வைப்பதோடு சரி என்று ஆதங்கப்படுவோருக்கு ஆறுதலாக இருக்கிறது அரசின் நடவடிக்கை!
பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 14 பேருந்துகளின் உரிமம் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களிடம் இருந்து ரூ10.50 லட்சம் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், நேற்று கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்திலிருந்து 592 பேருந்துகள் வெளியேறின. 14 ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்ததும், ஒரு சிலவற்றில் முறையான ஆவணங்கள் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் அபராதமாக ரூ. 10.50 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது சென்னையிலிருந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக ஆன்-லைன் முன் பதிவு மூலம் வசூலாகியுள்ள டிக்கெட் கட்டணம் ரூ. 1 கோடியைத் தாண்டியுள்ளது என்றார் அவர்.
அரசு நடவடிக்கை ஒருபுறம் இருக்கட்டும்! நீங்கள் ஆம்னி பேருந்தில் பயணம் செய்ய முடிவு செய்தவர்களாக இருந்தால், 044-24794709, 044-28594540, 044-28583497 ஆகிய தொலைபேசி எண்களிலும் 9444403096, 9443104686 ஆகிய செல்போன் எண்களிலும் புகார் தெரிவிக்கலாம்!