'சாதிவெறி' ஆசிஷ் நந்திக்கு எதிராக கலகக் குரல் எழுப்பாத 'சமூகநீதி' தமிழகம்!
தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் இயக்கங்களுமே இப்பொழுது 'விஸ்வரூபம்' காய்ச்சலில் வீழ்ந்து கிடக்கின்றன.
ஆனால் நாட்டின் பெரும்பான்மை மக்களின் கையில் அதிகாரம் சென்றடைந்ததால்தான் 'ஊழலே' உருவானது என்று பொறுப்பே இல்லாமல் ஒரு சாதி வெறியராக 'சமூக வியலாளர்' போர்வையில் உலா வரும் ஆசிஷ் நந்தி என்ற எழுத்தாளர் பேசியிருக்கிறார். அவருக்கு எதிராக 'சமூக நீதியின்' தாயகம் என்று பெருமைபீற்றும் தமிழகத்தில் ஒரு கலகக் குரலையும் காணவில்லை.
ஆங்கில ஏட்டின் செய்தியாளர் ஒருவர் கேட்டதற்காக சிலர் மட்டும் 'கருத்து தெரிவித்திருக்கின்றனர். திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி இது பற்றி கூறுகையில், "ஆசிஷ் நந்தியின் மனநிலை என்ன என்பது வெளிச்சமாகியிருக்கிறது. அவர் தமது கருத்து மூலம் அம்பலமாகியிருக்கிறார்" என்றார்.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கூறுகையில், போபர்ஸ், காமன்வெல்த் போன்ற ஊழல்களில் ஈடுபட்டது உயர் சாதியினர்தான். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் பிரதமராக பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரான தேவ கவுடா இருந்தார். அவர் ஒருவர்தான் ஊழலில் சிக்காத ஒரே பிரதமர். மற்ற உயர் சாதி பிரதமர்கள் அனைவருமே ஊழலுக்குள்ளாகியவர்கள்தான் என்று கூறியுள்ளார்.
இதுபோல் ஒரு சில கருத்துகள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் கொந்தளிப்பான ஒருநிலை உருவாகாமல் இருப்பதால்தான் ஊர் ஊருக்கு சாதிய சங்கங்களின் கூட்டத்தை பாமக நிறுவனர் ராமதாசால் நடத்த முடிகிறதோ!