தலைமையை விமர்சித்து, அழகிரியை ஆதரித்து போஸ்டர் ஒட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை: திமுக எச்சரிக்கை
மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பிறந்த நாள் விழா நாளை மதுரையில் நடக்கிறது. இதையொட்டி சென்னை நகரில் பல இடங்களில் மு.க. அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் திமுக தலைமையையும் விமர்சித்து வாசகங்கள் இடம் பெற்றுள்ளன
இவை திமுக தலைவர் கருணாநிதியின் கண்ணிலும் பட வேண்டும் என்பதற்காக அவரது வீடு அமைந்துள்ள சென்னை கோபாலபுரம் பகுதியில் மிக அதிக அளவில் ஒட்டியுள்ளனர்.
இதைப் பார்த்த திமுக தொண்டர்கள் சிலர் இரவோடு இரவாக அந்த போஸ்டர்களைக் கிழித்து எறிந்தனர். ஆனாலும், இந்த போஸ்டர் விவகாரம் திமுக தலைமையை பெரும் அதிர்ச்சிக்கும் கோபத்துக்கும் ஆளாக்கியுள்ளது.
இதையடுத்து திமுக தலைமை, அழகிரி ஆதரவாளர்களுக்கு இன்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
கழகத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்துக் கூறுவதாகக் காட்டிக்கொண்டு, கழகத்திற்கு அவப்பெயரும், இழுக்கும் ஏற்படுத்தும் வகையில் தவறான வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகள் சென்னை மாநகரெங்கும் காணப்படுகின்றன.
அந்தச் சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்டியவர்கள் என்று காணப்படும் பெயர்கள், கழகத்தில் எந்தக் கிளை உறுப்பினர்கள் என்று தெரியவில்லை. கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுபோன்று தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல், கழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்துவோர் எவராயிலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.