தமிழ்நாட்டில் கடுமையான உணவுப் பஞ்சம் வரும்! வைகோ எச்சரிக்கை
நெல்லை: தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்துவிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார். வெகு விரைவில் தமிழகம் மிகப்பெரிய உணவுப் பஞ்சத்தை சந்திக்க உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
வறட்சியினால் தற்கொலை செய்து கொண்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கோரியும், விவசாய கடனில் தவிக்கும் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் நெல்லை சந்திப்பு அருகே மதிமுக வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்திற்கு தலைமையேற்று வைகோ பேசியதாவது:
இந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியினால் கடன்வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியில்லை. அவர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு வீடுகளில் முடங்கியுள்ளனர்.
பொங்கல் பண்டிகையைக்கூட கொண்டாட முடியாமல் தவித்த விவசாயிகள் இருக்கின்றனர். பலர் நிலங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். கால்நடைகளுக்கு கூட தீவனம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால் குழந்தைகளைப் போல வளர்த்த ஆடுமாடுகளை விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாயம் கைகொடுக்காத காரணத்தினால் கூலி வேலை தேடி சொந்த நாட்டிலேயே அகதிகளாக இடம் பெயரும் நிலைக்கு ஆளாகிவிட்டனர் தமிழக விவசாயிகள்.
இந்த ஆண்டு முல்லைப்பெரியாறும், காவிரி நீரும் கை கொடுக்கவில்லை. நெல்லை மாவட்டத்தில் வற்றாத ஜீவநதியாக ஓடும் தாமிரபரணியும் கூட வற்றும் நிலைக்கு வந்துவிட்டது.
உரவிலையும் ஆயிரக்கணக்கில் உயர்ந்து விட்டது. உரத்துறையில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மத்திய அரசு உரிய தண்ணீர் கொடுக்க உத்தரவிடாமல் தமிழக விவசாயிகளை வஞ்சித்துவிட்டது. எந்த ஆண்டும் இல்லாமல் தமிழக விவசாயிகள் இந்த ஆண்டு கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் மிகப்பெரிய உணவுப் பஞ்சம் வருவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்பாட்டத்தில் பேசினார்.












Click it and Unblock the Notifications