மத்திய பிரதேசத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள டைனோசர் முட்டை ரூ.500க்கு விற்பனை
ஜபல்பூர்: சர்வதேச சந்தையில் ரூ.1 கோடி மதிப்புள்ள டைனோசர் முட்டைகள் மத்திய பிரதசேத்தில் ரூ. 500க்கு விற்கப்படுகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் டைனோசர் என்னும் ராட்சத மிருகங்கள் வாழ்ந்துள்ளன. அவை அழிந்துவிட்டாலும் அவற்றின் எலும்புகள், முட்டைகள் மண்ணில் புதைந்துள்ளன. அவை அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் தார்-மாண்ட்லா பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்து அழிந்ததாகக் கூறப்படுகிறது.
அங்கு 89 ஹெக்டேரில் டைனோசர் எலும்புகள், முட்டைகள் மண்ணில் புதைந்து கிடக்கின்றன. இந்த பகுதி கடந்த 2007ம் ஆண்டு முதல் பாதுகாப்பின்றி உள்ளது. இதனால் பலர் அங்கு புதைந்துள்ள டைனோசர் முட்டைகளை திருடிச் சென்று விற்றுவிடுகின்றனர். மகராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மத்திய பிரதேசத்திற்கு வந்து டைனோசர் முட்டைகளை கள்ளத்தனமாக வாங்கிச் செல்கின்றனர்.
சர்வதேச சந்தையில் ஒரு டைனோசர் முட்டையின் விலை ரூ.1 கோடி. ஆனால் மத்திய பிரதேசத்தில் அது ரூ.500க்கு விற்கப்படுகிறது. இங்கு ரூ.500க்கு வாங்கிச் சென்று சர்வதேச சந்தையில் ரூ.1 கோடி வரை விற்கின்றனர்.
டைனோசர் முட்டைகளை திருடிச் சென்று விற்பதை தடுக்க சட்டம் கொண்டு வர மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான வரைவு சட்டம் தயாரிக்கப்பட்டு அது அம்மாநில சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.