நெல்லை பல்கலைக்கழக கரிசல் திருவிழா நாளை துவக்கம்: திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு
நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொடர்பியல் துறை சார்பில் நடத்தப்படும் கரிசல் திரைவிழா நாளை தொடங்குகிறது. 30க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் இவ்விழாவில் திரைப்பட இயக்குனர்கள் பங்கேற்கின்றனர்.
இது குறித்து நெல்லை பல்கலைக்கழக தொடர்பியல் துறை தலைவர் கோவிந்தராஜு, பேராசிரியர் சுந்தரராமன், மனோ மீடியா கிளப்பின் தலைவர் பிரபாகரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் வாரத்தில் கரிசல் திரைவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு திரைவிழா நாளை (4ம் தேதி) துவங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதில் தமிழகத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 300 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். திருவிழா துவக்க விழாவில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்பட இயக்குனர் பாலாஜி தரணிதரன், படத்தில் நடித்த பகவதி பெருமாள், பல்கலைக்கழக தேர்வாணையர் பிரபாகரன் ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.
தொடர்ந்து அவர்களிடம் மாணவ, மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடக்கிறது. குறும்படம் மற்றும் ஆவணப் படபோட்டி, சிறந்த வானொலி அறிவிப்பாளர்களுக்கான போட்டி உள்ளிட்ட 14 விதமான போட்டிகள் நடக்கின்றன. 5ம் தேதி காலை புகைப்பட கண்காட்சி நடக்கிறது. மதியம் மதுபானகடை திரைப்பட இயக்குனர் கமலக்கண்ணன் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். மாலை 6 மணிக்கு கீதா இளங்கோவனின் ஆவணப்படம் திரையிடப்படுகிறது. 6ம் தேதியன்று காலை 10 மணிக்கு எழுத்தாளர் ராமகிருஷ்ணன் பங்குகொள்ளும் கலந்துரையாடல் நடக்கிறது. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது என்றனர்.