ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் படுகொலை: ஐ.நா. புகார்
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போரில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு குழு குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகாலமாக நடைபெற்ற தாக்குதல்கல் குறித்த ஒரு அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புக் குழு ஆராய்ந்து அறிக்கையாக தாக்கல் செய்திருக்கிறது.
அதில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பொது மக்களின் பாதுகாப்பு குறித்து போதுமான முன் எச்சரிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டதால்தான் குழந்தைகள் பலர் பலியாகி உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் அறிக்கை குறித்து அமெரிக்கா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.