அப்சல் குருவை 8 பேர் முன்னிலையில் 8 நிமிடம் தூக்கிலிட்டுள்ளனர்
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவரிவாதி அப்சல் குரு நேற்று காலை 8 மணிக்கு டெல்லி திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவனை தூக்கிலிடும் செய்தியை வெள்ளிக்கிழமை மாலை அவனுக்கு தெரிவித்துள்ளனர். அவன் கடந்த 12 ஆண்டுகளாக இருந்த அறையில் இருந்து 20 மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் தான் அவன் தூக்கிலிடப்பட்டான் என்று தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து சிறையின் டைரக்டர் ஜெனரல் விம்லா மெஹ்ரா கூறுகையில்,
அப்சல் குரு தூக்கிலிடும் முன்பு மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தான். அவனை தூக்கிலிடும் முன்பு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அவனது ரத்த அழுத்தம் நார்மலாக இருந்தது என்றார்.
ஒரு டாக்டர், நீதிபதி, சிறை அதிகாரிகள், முஸ்லிம் மதத் தலைவர் உள்ளிட்ட 8 பேர் முன்பு அவன் தூக்கிலிடப்பட்டதாக தெரிகிறது. அவனை 8 நிமிடம் தூக்கிலிட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை 5 மணிக்கு எழுந்த அவன் தொழுததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.