தாக்கப்பட்ட குஷ்பு .. டிவிட்டரில் சப்போர்ட் கொடுத்த அழகிரி மகன்.. கொந்தளித்த ஸ்டாலின் மனைவி
சென்னை தனது கணவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தொணியில் நடிகை குஷ்பு அளித்த பேட்டியால் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின்தான் கடும் கொந்தளிப்புக்குள்ளாகி விட்டாராம். ஸ்டாலின் கூட சற்று பொறுமையாகத்தான் இருந்தாராம். அதேசமயம், மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி வேறு, குஷ்பு ட்வீட் செய்த செய்தியை ரீட்வீட் செய்தது ஸ்டாலின் தரப்பில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளதாம்.
சகிப்புத்தன்மை மிகவும் குறைவாகிக் கொண்டு வருகிறது திமுக வட்டாரத்தில். பெரிய தலை முதல் சின்னத் தலை வரை அத்தனை பேரும் எதற்கெடுத்தாலும் டென்ஷனாகி விடுகிறார்கள். மாற்றுக் கட்சியினர் ஏதாவது சொன்னால் கோபப்பட்டது போக,இப்போது சொந்தக் கட்சியினரே எதையாவது சொன்னால் கூட அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பொறும ஆரம்பித்து விடுகின்றனர்.
நடிகை குஷ்பு கட்சித் தலைமை குறித்து ஆனந்த விகடனுக்கு பேட்டி அளிக்கப் போக அது பெரும் புயலைக் கிளப்பி அவரது வீட்டைத் தாக்குவது, அவரைத் தாக்குவது, செருப்பைத் தூக்கி வீசுவது என்று தெருவுக்கு இழுத்து வந்து விட்டனர் தேரை.
இந்த நிலையில் இந்த மேட்டரில் ஸ்டாலினை விட அவரது மனைவி துர்காதான் கடும் கோபமாக இருக்கிறாராம். நடந்த சம்பவங்கள் குறித்த ஒரு பரபரப்பு தொகுப்பு...
என் உயிர் உள்ளவரை...
இதுதான் திமுகவில் தற்போது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஜனவரி 3ம் தேதி கட்சி நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி, என் ஆயுள் உள்ளவரை சமுதாய மேன்மைக்காகப் பாடுபடுவேன். அப்படியானால் அதற்குப் பின்னர் என்ன என்ற கேள்வி வரும். அதற்குப் பதில்தான் இங்கே அமர்ந்திருக்கிற ஸ்டாலின் என்றார் கருணாநிதி. இதுதான் பிரச்சினைக்கு அவர் போட்ட பிள்ளையார் சுழி.
கடும் கோபமான அழகிரி
கருணாநிதியின் இந்தப் பேச்சு ஸ்டாலின் தரப்பை குஷிப்படுத்தியது. அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் கருணாநிதி என்று ஸ்டாலின் தரப்பு பெருமையுடன் பேச ஆரம்பித்தது. ஆனால் இது அழகிகரி தரப்புக்கு கடும் ஆத்திரத்தைக் கிளப்பியது.
சங்கரமடம் அல்ல திமுக - அழகிரி
மு.க.அழகிரியே கருணாநிதியின் பேச்சை ரசிக்கவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது திமுக ஒன்றும் சங்கர மடம் அல்ல என்று கூறியவே கருணாநிதிதான் என்று செய்தியாளர்களுக்குப் பதிலளித்தார்.
கருணாநிதிக்கு வந்த பதில் கோபம்
அழகிரியின் பேச்சு கருணாநிதிக்கே கோபம் வந்து விட்டது. வழக்கமாக ஸ்டாலின், அழகிரியை சமாதானப்படுத்தும் அவர் இந்த முறை அழகிரி மீது கோபம் கொண்டார். அவரை சந்திக்கவே மறுத்து கடுப்பேற்றினார். இதை எதிர்பார்க்காத அழகிரி, கருணாநிதியை சந்திக்க கடுமையாகப் போராட வேண்டியதாகிவிட்டது. பின்னர் ஒருவழியாக அவரை சந்தித்தபோது, தனது குமுறலை அவர் கொட்டியதாக கூறப்பட்டது.
போஸ்டர் போட்டு மேலும் டென்ஷன்
இந்த நிலையில் அழகிரியின் பிறந்த நாளையொட்டி சென்னையில் அவரது ஆதரவாளர்கள் கோபாலபுரம் பகுதியில் கருணாநிதியின் கண்கள் படும்படியாக ஒட்டிய விஷமத்தனமான போஸ்டர்களால் கருணாநிதி மேலும் கோபமடைந்தார்.
தப்பான நேரத்தில் வாய் திறந்த குஷ்பு
இப்படி அடுத்த வாரிசு யார் என்பது தொடர்பாக கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின் இடையே சூடான சண்டை நடந்து வந்தபோதுதான் குஷ்பு ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டி அவருக்கு எதிராக திரும்பி விட்டது.
நாமளே முடிவுக்கு வரக் கூடாது...
மு.க.ஸ்டாலின்தான் அடுத்த தலைவர்ன்னு நாமளே அப்படி ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது, தலைவரே என்ன சொல்லியிருக்கார்ன்னா, எனக்கு அப்புறம் சமூகப்பணிகளைத் தளபதி ஸ்டாலின் செயல்படுத்துவார்ன்னுதான், அடுத்த தலைவர் தளபதியாத்தான் இருக்கணும்ன்னு அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருப்பவர்களுக் கும் கூட தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கு என்று குஷ்பு கூறியது சூட்டைக் கிளப்பி விட்டு விட்டது.
சிவா வீட்டுக் கல்யாணத்தில் வெடித்த பூகம்பம்
திருச்சி சிவா வீட்டு திருமணத்திற்காக திருச்சி வந்தபோதுதான் குஷ்புவுக்கு எதிராக திமுகவினர் கிளர்ந்தெழுந்தனர். திருமண மண்டபத்திற்கு வந்து விட்ட குஷ்பு அங்கு கருணாநிதிக்கு வணக்கம் வைத்து விட்டு அமர்ந்தார். அவரை பேச அனுமதிக்கு்மாறு கருணாநிதி கூறவே குஷ்புவும் எழுந்து பேச ஆரம்பித்தார். அப்போதுதான் ஆனந்த விகடன் பேட்டிக்கு எதிராக கொந்தளித்த திமுகவினர் சென்னையில் குஷ்பு வீட்டைத் தாக்கிக் கொண்டிருந்தனர்.
கனிமொழியின் கடுப்பு
குஷ்பு விவகாரம் சிவா வீட்டுத் திருமணக் கூடத்திற்கும் பரவியது. விகடன் பேட்டி குறித்து தனக்கு அருகில் இருந்தவர்களிடம் கருத்து தெரிவித்த கனிமொழி, இது தேவையில்லாதது, வரம்பு மீறிப் பேசியுள்ளார் குஷ்பு என்று கடுப்பாக சொன்னாராம். குஷ்பு வீடு தாக்கப்பட்ட தகவல் திருமண மண்டபத்திற்கும் பரவவே தொண்டர்கள் குஷ்புவை தாக்க திரண்டனர்.
தப்பி ஓடிய குஷ்பு
நிலைமை மோசமாவதை உணர்ந்த குஷ்பு வேகம் வேகமாக சங்கம் ஹோட்டலுக்குப் புறப்பட்டார். வெளியில் வந்த அவரை புதுக்கோட்டை திமுகவினர் சூழந்து கொண்டு சரமாரியாக திட்டியுள்ளனர். மேலும் அடிக்கவும் பாய்ந்தனர். இதையடுத்து வேகமாக காரில் ஏறி ஓடினார் குஷ்பு.
கருணாநிதியிடம் கண்ணீருடன் புகார்
சங்கம் ஹோட்டலில்தான் கருணாநிதி தங்கியிருந்தார். அங்கு போய் கருணாநிதியைச் சந்தித்து தான் தவறாக எதையும் சொல்லவில்லை என்று கண்ணீர் மல்க முறையிட்டாராம் குஷ்பு. மேலும் சென்னை வீட்டில் தனது இரு மகள்களும் தனியாக இருப்பதாகவும் கதறி அழுதாராம். அவரை ஆறுதல்படுத்திய கருணாநிதி, நீ உடனடியாக சென்னைக்குப் புறப்படு என்று கூறினாராம் கருணாநிதி.
கடும் கோபத்தில் துர்கா
அடுத்து ஸ்டாலினையும் சந்திக்க முயன்றார் குஷ்பு. ஆனால் ஸ்டாலின் மனைவி துர்கா கடும் கோபத்தில் இருப்பதாகவும், அவரைப் பார்த்தால் சரியாக இருக்காது என்றும் ஸ்டாலின் தரப்பில் கூறப்பட்டதால் ஸ்டாலினை பார்க்கும் முடிவை கைவிட்டாராம் குஷ்பு.
குஷ்பு மீது பாய்ந்த செருப்பு, வாட்டர் பாட்டில்
இதையடுத்து தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பினார் குஷ்பு. அங்கு வாசலிலேயே பெரும் திரளாக கூடியிருந்தனர் ஸ்டாலின் ஆதரவாளர்கள். இதனால் மிரண்டு போனார் குஷ்பு. குஷ்புவைப் பார்த்த அவர்கள் அவர் மீது வாட்டர் பாட்டில்களையும், செருப்புகளையும் வீச ஆர்பித்தனர்.
ஏர்போர்ட்டிலும் தாக்குதல்
அங்கிருந்து ஒரு வழியாகத் தப்பிய குஷ்பு, விமான நிலையத்திற்கு விரைந்தார். ஆனால் விமான நிலையத்திற்குள்ளும் அவர் தாக்கப்பட்டார்.
குஷ்புவுக்கு ஆதரவாக கிளம்பிய துரை தயாநிதி
இந்த நேரத்தில்தான் அழகிரி தரப்பு தனது மூக்கை மெதுவாக மேட்டருக்குள் நுழைத்தது. குஷ்பு தனக்கு நேர்ந்த தாக்குதல் குறித்து டிவிட்டரில் ஒரு செய்தியைப் போட்டார். நான் நலமாக இருக்கிறேன். ஒரு துரதிருஷ்டம் நேர்ந்துவிட்டது. விசாரணை முடியும் வரை இதுபற்றி கருத்து எதுவும் சொல்ல முடியாது என்பதே அது. உடனடியாக அவருக்கு ஆதரவு தெரிவித்து சின்மயி, எஸ்.வி.சேகர் என பலரும் கருத்துக்களைக் கொட்டினர்.
பதிலுக்கு, இந்த இக்கட்டான சூழலில் பல தரப்புகளில் இருந்தும் வரும் ஆதரவுகளை கண்டு என் மனம் உணர்ச்சிவசப்படுகிறது. நான் எப்போதும் வெற்றிபெறும் பெண்ணாகவே இருந்து வருகிறேன். இப்போதும் அப்படியே என்றார். இந்த ட்விட்டை அப்படியே ரீட்வீட் செய்தார் துரை தயாநிதி. இது ஸ்டாலின் தரப்பை உசுப்பேற்றியுள்ளதாம்.
குஷ்புவை வைத்து அடுத்து திமுகவில் என்னவெல்லாம் அக்கப்போர் நடக்கப் போகிறதோ என்ற பதைபதைப்பில் உண்மையான திமுக தொண்டர்கள் கவலையுடன் காத்துள்ளனர்.