ஸ்பெக்ட்ரம் மறு ஏலம்- கலந்து கொள்ளாத, ஏலம் எடுக்காத நிறுவனங்கள் சேவையை தொடரக் கூடாது: சுப்ரீம் கோர்ட

ஸ்பெக்ட்ரம் பின்னணி
ஸ்பெக்ட்ரத்தை 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' அடிப்படையில் ஒதுக்கீடு செய்ததால் அரசுக்கு ரூ1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது என்று சிஏஜி அறிக்கை கூறியது. இந்த அறிக்கையால் நாட்டில் பெரும் அரசியல் புயலே எழுந்தது. ஆ.ராசா, கனிமொழி மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பெருந்தலைகள் பலவும் சிறைக்குப் போக நேர்ந்தது. தயாநிதி மாறன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.
உரிமங்கள் ரத்து
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆ. ராசா பதவி வகித்த 2008-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட 22 சர்க்கிள் (வட்டாரங்கள்)களுக்கான 122 உரிமங்களை அதிரடியாக உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட உரிமங்களையும் மறு ஏலம் விடவும் உத்தரவிட்டது. இந்த உரிமம் ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆ. ராசா, சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அம்மனுவை நேற்றுதான் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மறு ஏலம்
22 சர்க்கிளுக்கான 122 உரிமங்கள் ரத்தான பிறகும் சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பிற சர்க்கிள்களில் சேவையைத் தொடர்ந்து நடத்தி வந்தன. இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்பெக்ட்ரம் மறு ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்துக்கு அடிப்படை தொகை ஒன்றும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஏலம் மூலம் மத்திய அரசுக்கு ரூ30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் மறு ஏலத்தின் முடிவில் அரசுக்குக் கிடைத்தது வெறும் ரூ9,400 கோடிதான்! 22-ல் பல சர்க்கிள்கள் ஏலமே எடுக்கப்படவில்லை! இதற்குக் காரணமாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், ஏலத்துக்கான அடிப்படைத் தொகையை மிக மிக அதிக அளவில் நிர்ணயித்திருந்ததுதான் என்றும் கூறப்பட்டது. தொலைத் தொடர்பு நிறுவனங்களோ குறைவான விலைக்கு ஸ்பெக்ட்ரம் கிடைத்து விடும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போயின. இதனால்தான் பல சர்க்கிள்களை எடுக்கவே இல்லை.
அதிரடி உத்தரவு
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, கே.எஸ். ராதாகிருச்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று நடைபெற்றது. அப்போது, உரிமம் ரத்து செய்யப்பட்ட நிறுவனங்கள் சில மறு ஏலத்தில் கலந்து கொள்ளாதது பற்றியும் ஏலத்தில் கலந்து கொண்ட நிறுவனங்கள் கூடுதல் விலையாக இருக்கிறதே என்று ஒதுங்கிக் கொண்டது பற்றியும் கடுமையான அதிருப்தியை வெளியிட்டனர்.
இதனால் கடுமையான உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்திருக்கின்றனர்.
- உச்ச நீதிமன்றத்தால் உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட பின்னரும் சேவையைத் தொடர்ந்த சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த - வேண்டும்.
- கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற மறு ஏலத்தில் கலந்து கொள்ளாத 'உரிமம் ரத்தான' நிறுவனங்களும் 'ஏலம் எடுக்காத நிறுவனங்களும்" தங்களது சேவையைத் தொடரக் கூடாது. உடனடியாக நிறுத்த வேண்டும்.
- மறு ஏலம் பெற்றிருக்கும் நிறுவனங்கள் தங்களுக்குரிய சர்க்கிள்களில் உடனடியாக சேவையைத் தொடங்க வேண்டும்.
- விலைபோக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை உடனடியாக மறு ஏலம் விட வேண்டும்
ஆகிய உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.
யுனிநார், வீடியோகானுக்கு சிக்கல்
உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடியால் யுனிநார் மற்றும் வீடியோகான் நிறுவன சேவைகள் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications