பாரத் பந்த்: பெங்களூரில் பெரிய அளவில் பாதிப்பில்லை, ஆனால் 'டிராபிக்' கம்மி!
பெங்களூரில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. வங்கிகள் மூடப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. பேருந்துகள் மட்டும் குறைந்த அளவில் ஓடின. மற்றபடி பெட்ரோல் பங்குகளும், கடைகளும் திறந்திருந்தன. வேலைநிறுத்தத்தால் பெங்களூரில் பெரிய அளவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு கூறிவிட்டன. இதனால் சாலைகளில் வாகனங்கள் குறைவாகவே இருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் பந்த் நடத்துவோருக்கு நன்றி சொல்லியபடி கொஞ்சம் நிம்மதியாக வண்டி ஓட்டினர்.
மேற்கு வங்கத்திலும் பாதிப்பில்லை
மமதா பானர்ஜியின் தலைமையின் கீழ் உள்ள மேற்கு வங்கத்தில் சிறிதளவே பாதிப்பு ஏற்பட்டது. இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லாமல் நடைபெற்றது.
அதேசமயம், கம்யூனிஸ்ட் வசம் உள்ள திரிபுராவில் மாநிலம் முடங்கிப் போனது.
டெல்லியில் டாக்சிகளின் பணக் கறவை
போராட்டத்தைப் பயன்படுத்தி டெல்லியில் டாக்சிக்காரர்கள் மக்களிடம் பணம் கறக்கும் செயலில் ஈடுபட்டனர். டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து செல்வதற்கு டாக்சிக்கு ரூ.2000 வசூலிக்கப்பட்டது.