ரிசர்வேசன் கேட்டாராம், தரலையாம்.. அதனால் இனிமேல் தனித்து போட்டியாம்- ராமதாஸ் சொல்கிறார்
திண்டிவனம் அருகே ஏப்பாக்கம் கிராமத்தில் நடந்த பாமக பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், வன்னியர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூட்டணியில் இருந்தபோது திமுக, அதிமுகவிடம் அடிக்கடி வலியுறுத்தி வந்தேன். ஆனால், ஏமாற்றம்தான் கிடைத்தது.
எனவே இனி திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என முடிவு செய்து தனியாக தேர்தலை சந்திப்பது என முடிவு செய்துள்ளேன்.
சிறுபான்மைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இதுவரை தமிழகத்தை 30 பேர் ஆண்டுள்ளனர்.
வன்னியன் ஏன் ஆளக்கூடாது?. கிராமங்கள் தோறும் இளைஞர்கள், இளம் பெண்களிடம் பாமக எழுச்சி பெற்றுள்ளது. வன்னியன் ஆள வேண்டும் என்ற தாரக மந்திரத்தை நினைத்தால் பாமக ஆட்சிக்கு வந்துவிடும்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவினர் ஓட்டுக்காக பணம் தர வந்தால் பாமக இளைஞர்கள் அவர்களை தடுத்து பணம் தராமல் திருப்பி அனுப்ப வேண்டும். நாம் கட்டும் வரிப்பணம் மற்றும் டாஸ்மாக் வருமானத்தில் இருந்து இலவசங்களை தருகிறார்கள்.
தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் தமிழகத்தில் நிகழப்போகிறது என்றார் ராமதாஸ்.
இவரை கூட்டணியில் சேர்க்க திமுக தயாராக இல்லை என்பதும், அதிமுக கூட்டணியில் சேர்க்குமா என்பது தேர்தலுக்கு முதல் வாரம் வரை யாருக்குமே தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் தான் தனித்துப் போட்டி என்கிறார் ராமதாஸ்.
கெஜட்டில் காவிரி தீர்ப்பு-தமிழகத்திற்கு மிகப்பெரிய வெற்றி-ராமதாஸ்:
இந் நிலையில் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசு இன்று அரசிதழில் வெளியிட்டிருக்கிறது. 6ஆண்டுகள் தாமதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றாலும், இப்போதாவது இதை மத்திய அரசு இதை செய்திருக்கிறதே என்ற வகையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
இதன்மூலம் காவிரி ஆற்று நீரில் நமக்குள்ள உரிமைக்கு சட்ட பூர்வமான பாதுகாப்பு கிடைத்திருக்கிறது. இனி தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடக அரசால் மறுக்க முடியாது. அந்த வகையில் இந்தத் தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றயாகும்.
அதேநேரத்தில், கர்நாடகத் தேர்தலைக் கருத்தில் கொண்டு நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைப்பதில் மத்திய அரசு தாமதம் செய்யலாம். அவ்வாறு செய்தால் அது தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். 10 மாதங்களாக காலியாக உள்ள காவிரி நடுவர் மன்றத் தலைவர் பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.