ரயில் மோதி 5 பேர் பலி- செல்லில் பேசியபடி வண்டி ஓட்டியதால் வந்தது வினை
நெல்லை: நாங்குநேரி அருகே ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்கும்போது செல்போன் பேசிக் கொண்டே பைக் ஓட்டியதால் 5 உயிர்கள் பலியானதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
வள்ளியூரில் ஹோட்டல் நடத்தி வந்தவர் ராஜமாணிக்கம். இவரது உறவினர்கள் வெங்கடாசலம், கணபதி, களக்காடு தேவநல்லூரை சேர்ந்த இசக்கிமுத்து, ராமநாதபுரம் அருகேயுள்ள குட்டன்குளத்தை சேர்ந்த ஞானராஜேந்திரன் ஆகியோர் நேற்று முன்தினம் நாங்குநேரி அருகேயுள்ள ஸ்ரீரங்கராஜபுரத்தில் உறவினர் கனி என்பவர் இறந்த தூக்கம் விசாரிக்க இரு பைக்குகளில் சென்றனர்.
இறுதி சடங்கு முடிந்து மதியம் 5 பேரும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். நாங்குநேரி அருகே நெடுங்குளத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது கொச்சியில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் ஏற்றி வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் 5 பேரும் உடல் நசுங்கி இறந்தனர்.
விபத்து நடந்த ஆளில்லா ரயில்வே கேட் அருகே கட்டிட வேலை நடந்து வருகிறது. அதில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், 2 பைக்குளில் வந்தவர்கள் ரயில்வே கேட்டை கடப்பதற்கு முன் செல்போனில் பேசிக் கொண்டே சென்றனர். இதனால் அங்கு வந்த சரக்கு ரயிலை அவர்கள் கவனிக்கவில்லை. இதனை பார்த்த நாங்கள் சைகை காட்டி கூச்சல் போட்டோம். அதனையும் அவர்கள் கவனிக்கவில்லை.
2 பைக்குகளிலும் வந்தவர்கள் ஓரே நேரத்தில் பேசிக் கொண்டே வந்ததால் கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்தில் சிக்கி கொண்டனர். நாங்கள் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தும் பலன் அளிக்காமல் போய் விடடது. எங்கள் கண்முன் ரயிலில் அடிபட்டு உடல் துண்டாகி பலியானதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து விட்டோம் என்றனர்.