உலுக்கும் ஹெலிகாப்டர் ஊழல்: இத்தாலி போன சிபிஐ வெறுங்கையுடன் திரும்பியதா?
டெல்லி: நாட்டை உலுக்கும் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இத்தாலிக்குப் போன சிபிஐக்கு எந்த ஒரு ஆவணமும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்களை தயாரிக்க ரூ3,600 கோடிக்கான ஆர்டரை இத்தாலியின் பின்மெக்கானிக்கா நிறுவனமும் அதன் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்டாவும் பெற்றிருந்தன. இதற்காக ரூ362 கோடியை இந்தியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததும் அம்பலமானது.
இது தொடர்பாக பின்மெக்கானிகா நிறுவன தலைவர் உள்ளிட்ட இருவரை இத்தாலி அரசு கைது செய்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது என்று சிபிஐ விசாரிக்கத் தொடங்கியது.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற சிபிஐ, ராணுவம் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு இத்தாலி சென்றது. அந்த குழுவினர் இத்தாலியில் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேசினர். ஆவணங்களை வாங்கி வருவதற்காக 2 சிபிஐ அதிகாரிகள் மிலன் நகரில் தங்கியிருந்தனர். அவர்களில் ஒருவர் நேற்று இந்தியா திரும்பினார். அவரிடம் முக்கிய ஆவணங்கள் சில இருப்பதாகக் கூறப்பட்டாலும் உண்மையில் எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் வெறுங்கையுடன் திரும்பியிருப்பதாகவே கூறப்படுகிறது.