ஸ்ரீஹரிகோட்டா: 7 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.–சி20 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!
விண்ணில் ஏவப்பட இருப்பது இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளில் 23-வது ராக்கெட் . ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவு தளத்தில் இருந்து இது விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்தியா-பிரான்சு நாடுகள் இணைந்து தயாரித்துள்ள சரள் என்ற பிரதான செயற்கைகோளையும் 6 துணை செயற்கைக்கோள்களையும் இந்த ராக்கெட் ஏந்திச் செல்கிறது.
சரள் செயற்கைக் கோள்
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்படும் 56-வது செயற்கைக்கோள் சரள் ஆகும். பிரதான செயற்கைக்கோளான சரளின் எடை 400 கிலோ. இது கடல்களைப் பற்றிய அறிவியல் ஆராய்ச்சிக்காகவும், கடல் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்வதற்கும் பயன்படும். சரள் செயற்கைகோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்.
துணை செயற்கைக் கோள்கள்
சரள் செயற்கைகோளுடன் கனடா, ஆஸ்திரியா, டென்மார்க், இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த 6 துணை செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்படுகின்றன. கனடா நாட்டின் 148 கிலோ எடை கொண்ட சபையர் என்ற செயற்கைகோள், விண்வெளியில் இருந்து பூமியை பல்வேறு பரிமாணங்களில் படம் பிடிக்கும். கனடா நாட்டின் 74 கிலோ எடை கொண்ட நியோசாட் என்ற செயற்கைகோள், புவிவட்டப் பாதையில் பூமிக்கு அருகில் காணப்படும் சூரியனைச் சுற்றிவரும் குறுங்கோள் மற்றும் செயற்கைக்கோள்களை ஆய்வு செய்யும். ஆஸ்திரியா நாட்டின் வியன்னா பல்கலைக்கழகத்தின் 14 கிலோ எடை கொண்ட என்.எல்.எஸ். 8.1(யுனிபிரைட்) என்ற செயற்கைகோள் நட்சத்திரங்களின் வெப்பநிலை வேறுபாட்டை அளவிடும். ஆஸ்திரியா நாட்டின் கிரேஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 14 கிலோ எடை கொண்ட என்.எல்.எஸ்.8.2 (பிரைட்) என்ற செயற்கைகோள், வானில் உள்ள பிரகாசமான நட்சத்திரங்களை ஆய்வு செய்யும். டென்மார்க் நாட்டின் அல்போர்க் பல்கலைக்கழகத்தின் 3 கிலோ எடை கொண்ட என்.எல்.எஸ்.8.3 (ஆயுசாட்-3) என்ற மிகச்சிறிய செயற்கைகோள் ஆர்ட்டிக் பனிப்பகுதியில் கப்பல்களில் இருந்து தானியங்கி சமிக்ஞைகள் பெறுவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயும். இங்கிலாந்து நாட்டின் 6½ கிலோ எடை கொண்ட ஸ்டாண்ட்-1 என்ற செயற்கைகோள், விண்வெளி பகுதியில் செல்போன் இயக்கம் குறித்து மதிப்பீடு செய்யும். ஜனாதிபதி வருகை விண்வெளி பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
ராக்கெட்டின் விண்வெளிப் பயணத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் ஆந்திர மாநில கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மன், ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்டோர் பார்வையிடுகின்றனர். இதற்காக இன்று பிற்பகல் 1 மணி அளவில் தனி விமானத்தில் சென்னைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வந்தார். அவரை அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வரவேற்றனர். ஆந்திரா அரசு சார்பில் அந்த மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் ஜனாதிபதியை வரவேற்றார். பின்னர், சென்னையிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஸ்ரீஹரிகோட்டா சென்றார்.
சிறிது தாமதம்
பி.எஸ்.எல்.வி. ராக்கெட்-20 மாலை 5.56க்கு விண்ணில் ஏவப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. வானிலையில் ஏற்பட்ட தடங்கலால் 5 நிமிடம் தாமதமாக 6.01க்கு விண்ணில் ஏவப்பட்டது. 7 செயற்கைக் கோள்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சுமந்து சென்று விண்வெளியின் சுற்றுவட்டப் பாதையில் சரியாக நிலை நிறுத்தியது. ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை மூத்த விஞ்ஞானிகளுடன் அமர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பார்வையிட்டார். பின்னர் வெற்றிகரமாக ராக்கெட்டை விண்ணில் ஏவிய விஞ்ஞானிகளுக்கு அவர் வாழ்த்துகளையும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டார்.