சூர்யநெல்லி வழக்கு: ஃபேஸ்புக்கில் பி.ஜே.குரியன் பற்றி கமெண்ட் அடித்த 111பேர் மீது வழக்கு
திருவனந்தபுரம்: சூர்யநெல்லி கற்பழிப்பு வழக்கு தொடர்பாக பி.ஜே.குரியன் பற்றி ஃபேஸ்புக்கில் அவதூறாக கமென்ட் அடித்து அதை ஷேர் செய்ததற்காக கேரள சைபர் கிரைம் போலீஸ் 111 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
கேரள மாநிலத்தில் இப்போது பரபரப்பாக பேசப்படுவது சூர்யநெல்லி கற்பழிப்பு வழக்கு. இந்த வழக்கில் பிரபல கேரள காங்கிரஸ் தலைவரும் ராஜ்ய சபா துணைத்தலைவருமான பி.ஜே.குரியனை தொடர்பு படுத்தி செய்திகள் வெளியாகி காங்கிரசுக்கு பெரும் குடைச்சலை கொடுத்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக ஃபேஸ்புக்கில் ஏராளமானோர் கமெண்ட் அடித்துள்ளனர். இந்த செய்திகளை ஏராளமானோர் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில் கேரளா மகிளா காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணா கொடுத்த புகாரின் அடிப்படையில் கேரளா போலீஸ் ஃபேஸ்புக்கில் கமெண்ட் போஸ்ட் செய்த ஒருவர் மீதும் அதை ஷேர் செய்ததாக மேலும் 110பேர் மீதும் தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66 ஏ-வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளா சைபர் போலீஸ் இதுவரை இந்த புகார் தொடர்பாக பல ஃபேஸ்புக் பயனாளிகளிடம் விசாரணை செய்துள்ளதாகவும் ,இதுவரை பி.ஜே.குரியன் தொடர்பான அவதூறு செய்தியை 2000த்துக்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளதாகவும் கூறியுள்ளது. இப்போது வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இந்த வழக்கின் விசாரணை அதிகாரி சஜி லுகோஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பிந்து கிருஷ்ணா கேரளா முதல்வர் உம்மன் சாண்டியிடம் ஃபேஸ்புக்கில் குரியன் பற்றி அவதூறாக செய்தி பகிர்ந்துகொள்ளப் படுவதைப் பற்றி புகர் அளித்தார். அதை மாநில போலீஸ் தலைவர் மூலம் சைபர் போலீசுக்கு முதல்வர் அனுப்பினார்.மேற்கொண்டு இந்த விவகாரத்தை மாநில ஹைடெக் கிரைம் விசாரணைப பிரிவு விசாரித்து ,சைபர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜி லுகோஸிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.இவர் மேற்கொண்டு இந்த வழக்கு பதிவு செய்துள்ளார்.
ஜாமீனில் விடக்கூடிய இந்த செக்சன்66 ஏவின் படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம்.
இதுபற்றி மாநில முதல்வரிடம் புகார் அளித்த பிந்து கிருஷ்ணாவிடம் கேட்டபோது அந்த கமெண்ட்டுகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை ,எந்த ஒரு பெண்ணாலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அவை மோசமாக இருந்தன. பி.ஜே.குரியனுக்கு ஆதரவாக செயல்படும்படி எனது கட்சி கேட்டுக்கொண்டதால் நான் இந்த நடவடிக்கையில் இறங்கினேன் என்றார்.