பாரட்சமற்ற நிவாரணம் கோரி திருவாரூரில் 100 இடங்களில் சாலை மறியல்- 1000 பேர் கைது
திருவாரூர்: காவிரி டெல்டா மாவட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ15 ஆயிரம் நிவாரணம் கோரி திருவாரூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் சங்கத்தினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏக்கருக்கு ரூ15 ஆயிரம் நிவாரணம் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நிவாரணத் தொகையை பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் விவசாய தொழிலார்களுக்கு ரூ10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இக்கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 1000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் மறியல் செய்த இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று இதே திருவாரூர் மாவட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கக் கோரி அடியக்கமங்கலத்தில் மத்திய அரசின் பெட்ரோல் கிணறுகளை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.