கியூபா அதிபராக ரவுல் கேஸ்ட்ரோ மீண்டும் தேர்வு!2018-ல் ஓய்வு அறிவிப்பு!
கியூபா நாட்டின் அதிபராக பிடல் கேஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் கேஸ்ட்ரோ (வயது 81) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தாம் 2018-ம் ஆண்டுடன் பதவியில் இருந்து விலகிவிடுவதாகவும் ரவுல் அறிவித்திருக்கிறார்.
கடந்த 2006ம் ஆண்டு முன்னாள் அதிபர் பிடல் கேஸ்ட்ரோவுக்கு உடல் நலக்குறைவால் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து இடைக்கால அதிபராக பதவியேற்றுக் கொண்ட ரவுல் கேஸ்ட்ரோ 2008ல் முறைப்படி அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
அவரது ஐந்தாண்டு பதவிக் காலம் தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து 2-வது முறை அதிபராக ரவுல் கேஸ்ட்ரோ நேற்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
கியூபாவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒரு அதிபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்பதால் இதுவே ரவுல் கேஸ்ட்ரோவின் இறுதி பதவிக்காலமாக இருக்கும். இதனால் தாம் 2018 ஆம் ஆண்டு பதவியில் இருந்து விலகிவிடுவேன் என்றும் தற்போதே அறிவித்திருக்கிறார் ரவுல் கேஸ்ட்ரோ.