'டாக்டர்' ராகுலின் புது பார்முலா... 2 வாட்டி தோத்துட்டா 3வது வாட்டி சீட் கிடையாது!
லோக்சபா தேர்தலுக்காக அத்தனை கட்சிகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. யாருடன் சேருவது, எப்படிப் போட்டியிடுவது, எதை முன்வைத்துப் பிரசாரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்ளையும் அவர்கள் திட்டமிட்டுக் கொண்டுள்ளனர்.
அதேபோல காங்கிரஸ் கட்சியும் தயாராகி வருகிறது. அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பல்வேறு உத்திகளைத் திட்டமிட்டு கட்சி மேலிடத்திற்குத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் வேட்பாளர் பட்டியலை இந்த முறை அவரே நேரடியாக முடிவு செய்யப் போவதாகவும் கூறுகின்றனர். இதனால் பலரது வயிற்றில் புளியைக் கரைத்தாற் போல உள்ளதாம்.
2 முறை லோக்சபா தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தவர்களுக்கு இந்த முறை சீட் கிடையாது என்பது ராகுலின் திட்டங்களில் ஒன்றாம். இதுவும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம். தோற்றவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மீண்டும் கிடையாது என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளதால் பலருக்கு பெரும் கிலியாக உள்ளதாம்.
குஜராத் சட்டசபைத் தேர்தலில் கூட இந்த பார்முலாவைத்தான் அமல்படுத்தினர். அப்படியும் அங்கு காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளில் மண்ணைக் கவ்வியது என்பது குறிப்பிடத்தக்கது.