இலங்கை: ஜெனிவா தீர்மானத்தை பற்றி எதுவும் சொல்ல முடியாது: சல்மான் குர்ஷித் கைவிரிப்பு!
ராஜ்யசபாவில் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தின் முடிவில் சல்மான் குர்ஷித் பேசுகையில், இலங்கை அண்டை நாடு. வேறு ஒரு நாட்டின் பிரச்சனையில் நாம் தலையிட முடியாது.
இலங்கையில் போர் நடைபெற்ற காலம் அந்த நாட்டின் வரலாற்றில் மிக மோசமான காலமாகும். போர் தொடர்பான வெளியான காட்சிகள் மனதைப் பிசைகின்றன. உறுப்பினர்கள் உருக்கமான கருத்தை நாங்கள் மதிக்கிறோம்.
இலங்கை தமிழர் பிரச்சனை என்பது தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனை மட்டுமல்ல. நாட்டின் மொத்த பிரச்சனையாக கருதுகிறோம். அமெரிக்கா ஒரு விஷயம் செய்கிறது என்பதற்காக நாமும் அப்படி செய்ய வேண்டும் என்பது அல்ல. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா கடந்த ஆண்டு தீர்மானம் கொண்டு வந்தது. அதை நாம் ஆதரித்தோம். அதன் பின்னர் அங்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
தற்போதும் அப்படி ஒரு தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. அந்த ஜெனிவா தீர்மானம் பற்றிய எம்.பிக்களின் கருத்துகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும். தற்போது எதுவும் சொல்ல முடியாது.
இலங்கையைப் பொறுத்தவரையில் எதிரி நாடு என்று நாம் சொல்ல முடியாது. ஆசியாவின் அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயல்படவே இந்தியா விரும்புகிறது. இந்தியா பெரியண்ணன் என்ற நிலையோடு நடந்து கொள்ள முடியாது.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு 13-வது அரசியல் திருத்தம்தான் அடிப்படையானது. தமிழருக்குத் தன்னாட்சி வழங்க இந்தியா வலியுறுத்தி வருகிறது. தமிழர்கள் வாழும் வடக்கில் செப்டம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. தேர்தல்தான் அரசியல் தீர்வாக இருக்கும் என்றார்.
சல்மான் குர்ஷித்தின் பேச்சுக்கு தொடர்ந்து திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் மற்றும் பாஜகவின் எம்பிக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சே ஆகியோர் தமிழருக்கு தன்னாட்சி உரிமை வழங்க முடியாது. இலங்கையின் அரசியல் சாசன திருத்தம் 13-வது திருத்தத்துக்கு இடமே இல்லை என்று கூறியிருப்பது பற்றி பாஜகவின் வெங்கையா நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோர் சுட்டிக் காட்டினர்.
இதற்கும் மழுப்பலாகவே பதிலளித்தார் சல்மான் குர்ஷித். இதேபோல் இலங்கையை எதிரிநாடு என்று சொல்ல முடியாது என்று குர்ஷித் பேசியதும் கடும் எதிர்ப்பை உருவாக்கியது.