8வது பட்ஜெட் தாக்கல் செய்த ப.சிதம்பரம்: இது இந்தியாவின் 82வது பட்ஜெட்
இது இந்தியாவின் 82வது தேசிய பொது பட்ஜெட் ஆகும். தனிப்பட்ட முறையில் ப.சிதம்பரத்துக்கு இது 8வது பட்ஜெட்டாகும்.
இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை 25 பேர் மத்திய நிதியமைச்சர்களாக இருந்துள்ளனர்.
நாட்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் ஆர்.கே.சண்முகம் செட்டி. தாக்கலான ஆண்டு 1947, நவம்பர் 26ம் தேதி.
இதுவரை 65 முறை வழக்கமான பட்ஜெட்டும், 12 முறை இடைக்கால பட்ஜெட்டும், 4 தடவை மினி பட்ஜெட்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நிதியமைச்சர்களிலேயே மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தான் 10 பட்ஜெட்களை தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ப.சிதம்பரம் (8 முறை) உள்ளார்.
யஷ்வந்த் சின்கா, ஒய்.பி.சவான், சி.டி.தேஷ்முக் ஆகியோர் 7 முறையும், மன்மோகன் சிங், டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் 6 முறையும், ஆர்.வெங்கட்ராமன், எச்.எம்.படேல் 3 முறையும், வி.பி.சிங், ஜஸ்வந்த் சிங், சி.சுப்பிரமணியம், ஜான் மதாய், ஆர்.கே.சண்முகம் செட்டியார் ஆகியோர் தலா 2 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.
மறைந்த பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் சரண் சிங், என்.டி.திவாரி, மது தண்டவதே, எஸ்.பி.சவாண், சச்சிந்திரா செளத்ரி ஆகியோர் தலா ஒரு முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.
நிதியமைச்சர்களாக இருந்தும் ஐ.கே.குஜ்ரால், எச்.என்.பகுகுனா இருவருக்கும் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.