விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் கெய்ல் நிறுவனத்தின் திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கொச்சினிலிருந்து பெங்களூரு வரை 871 கிலோ மீட்டர் தொலைவிற்கு எரிவாயு எடுத்து செல்வதற்கான குழாயை கெய்ல் நிறுவனம் அமைத்து வருகிறது.
தமிழகத்தில், ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்ட விளைநிலங்கள் வழியாக இந்த எரிவாயு குழாய்கள் பதிக்கப்படுவதால், விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறிவருகின்றனர். இதனை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அகர்வால் மற்றும் நீதிபதி பால் வசந்த குமார் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது, எரிவாயு குழாய் புதிக்கும் பணிகளுக்கு 3 வார காலம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்த பிரச்னையில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்ட ஆட்சியர்கள் 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.