ஹைதரபாத் குண்டுவெடிப்பு: விசாரணை விவரங்களை பாக். உளவாளிக்கு கொடுத்த என்.எஸ்.ஜி அதிகாரி
இந்திய ராணுவத்தில் மேஜர் நிலையில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் தேசிய பாதுகாப்புப் படைக்கு மாற்றப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் உளவாளி என்று சந்தேகிக்கப்படும் ஒருநபர் அவரை தொலைபேசியில் அழைத்திருக்கிறார். ஆனால் அவருக்குப் பதிலாக வேறு ஒரு அதிகாரி பேசியிருக்கிறார். அந்த உளவாளியும் குறிப்பிட்ட அதிகாரியிடம்தான் பேசுகிறோம் என்று நினைத்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இது தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்பில் இருந்த அதிகாரி, ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு இடத்தை நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல் மற்ற புலனாய்வு அமைப்புகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டு உஷார் படுத்தப்பட்டனர்.
இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு படை தலைவர் அர்விந்த் ரஞ்சன், அந்த அதிகாரியை தொலைபேசியில் அழைத்த நபர் யார் என்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் ஒரு அதிகாரி...
இதனிடையே ராஜஸ்தானில் கைதான ஐஎஸ்ஐ உளவாளியுடன் தொடர்புடைய மற்றொரு அதிகாரியிடம் டெல்லி போலீசாரும் புலனாய்வு அமைப்பினரும் விசாரணை நடத்தினர். கடந்த மாதம் பொக்ரானில் நடைபெற்ற விமானப் படைப் பயிற்சியின்போது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்ததாகவும் சில முக்கியத் தகவல்களை அந்த அமைப்புக்கு அளித்ததாகவும் சுமர் கான் என்பவர் சிக்கினார். அவருடைய தொலைபேசி அழைப்புப் பட்டியலில் உள்துறை அமைச்சகத்தில் வெளிநாட்டவர் விவகாரங்கள் துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அதிகாரியிடம் புலனாய்வு அமைப்பினரும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் பலருக்கு முறையற்ற வழியில் விசா நீட்டிப்பு செய்து தந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.