ஆயிரக்கணக்கானோருடன் வைகோ உண்ணாவிரதம்- விவசாயிகளின் வங்கிக்கடன்களை ரத்து செய்யக் கோரிக்கை
விருதுநகர்: வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கட்சித் தொண்டர்களுடன் விருதுநகரில் ஒரு நால் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
இன்று காலை விருதுநகர் தேசபந்து மைதானத்திற்கு வந்த வைகோ அங்கு உண்ணாவிரதம் அமர்ந்தார்.அவருடன் 1000க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்களும் அமர்ந்துள்ளனர்.
அப்போது வைகோ கூறுகையில்,
இந்த விருதுநகர் தியாக பூமி. தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார் இங்குதான் உயிர்நீத்தார். இதன் நினைவாகவே அண்ணா முதல்வராக பதவியேற்ற உடன் சென்னை மாகாணம் தமிழ்நாடாக உதயமானது.
வானம் பார்த்த பூமியான விருதுநகர் மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கருகிவிட்டன. இங்குள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.
காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமே ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது. தென் மாவட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் எப்போது கிடைக்கும்.
பயிரிட்ட விவசாயிகள் பயிர்கள் கருகிப்போனதால் கடனில் தத்தளிக்கின்றனர். அவர்களுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கவும் கேட்டுக் கொண்டுள்ளோம்.
காங்கிரஸ் அரசு பதவி ஏற்ற பின்னர் உரவிலைகள் தாறுமாறாக உயர்ந்துவிட்டனர். இயற்கையும் வஞ்சித்துவிட்டது. எனவே விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்யவேண்டும்.
இதனை வலியுறுத்தியே இந்த உண்ணாவிரதம் இங்கே நடைபெற்று வருகிறது. கோடிக்கணக்கான விவசாயிகளின் மனக்குமுறலை அடுத்தே விருதுநகரில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறுகிறது என்றும் வைகோ கூறினார்.