மறு உத்தரவு வரும் வரை நாட்டை விட்டு வெளியேறக் கூடாது - இத்தாலி தூதருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
அரபிக் கடலில், இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு கேரள மீனவரையும், ஒரு தமிழக மீனவரையும் இத்தாலி நாட்டுக் கப்பலில் பயணித்த அந்த நாட்டு கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பாக இத்தாலி நாட்டுக் கடற்படையினர் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் சமீபத்தில் அவர்களது நாட்டுக்கு நிபந்தனையின் பேரில் அனுமதிக்கப்பட்டனர். அதாவது அந்த நாட்டில் நடந்த தேர்தலுக்குப் பிறகு மீண்டும் இந்தியா திரும்பி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்பது நிபந்தனை. இதை ஏற்றுக் கொண்டு சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவாதப் பத்திரத்திலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார் இத்தாலி தூதர் டேணியல் மன்சினி.
ஆனால் தற்போது இரு கடற்படை வீரர்களையும் திருப்பி அனுப்ப முடியாது என்று அந்த நாடு கூறி விட்டது. இதனால் இந்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இத்தாலியின் செயல் மிகப் பெரிய நம்பிக்கை துரோகம் என்று இந்தியக் கட்சிகள் அனைத்தும் சாடியுள்ளன.
மேலும் சுப்ரீம் கோர்ட்டும் இந்த விவகாரத்தில் கடும் கோபமடைந்துள்ளது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இத்தாலி தூதர் டேணியல் மன்சினி நேரில் ஆஜரானார். தான் கைது செய்யப்படாமல் தப்பிப்பதற்காக தனக்கு தூதரக சலுகை காட்ட வேண்டும் என்று அவர் கோரி மனு ஒன்றை சமர்ப்பித்தார்.
அதைப் பரிசீலித்த நீதிபதிகள் கோபம் கலந்த குரலில் கூறுகையில், இனி மேல் உங்களை நம்புவதாக இல்லை. இத்தாலி மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம். இத்தாலி தூதர் இவ்வாறு நடந்து கொள்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அடுத்த விசாரணை ஏப்ரல் 2ம் தேதி நடைபெறும். அதுவரை இந்தியாவை விட்டு இத்தாலி தூதர் வெளியறேக் கூடாது.
மார்ச் 22ம் தேதி வரை இத்தாலிக்கு அவகாசம் தருகிறோம். அதற்குள் இத்தாலிய கடற்படையினரான மஸ்ஸிமிலனோ லட்டோர், சால்வடோர் கிரோன் ஆகிய இருவரையும் நேரில் ஆஜர்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இத்தாலி தூதர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும் என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள்.
ஏற்கனவே இத்தாலி தூதர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று மார்ச் 14ம் தேதி உத்தரவிட்டிருந்தது சுப்ரீம் கோர்ட் என்பது நினைவிருக்கலாம். தற்போது இது ஏப்ரல் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 22ம் தேதிக்குள் இரு இத்தாலிய கடற்படையினரும் இந்தியாவுக்கு கொண்டு வரப்படாவிட்டால், இத்தாலி தூதர் அன்றைய தினம் கைது செய்யப்படக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.