கருணாநிதி மீது அதிருப்தி.. பிரிந்து போய் ராஜினாமா செய்த அழகிரி.. கூடவே நெப்போலியனும்!
இந்தக் கடிதத்தைக் கொடுக்க அவர் தாமதம் செய்ததால் சின்னதாக ஒருசலசலப்பும் ஏற்பட்டு விட்டது.
சமீப காலமாக ஸ்டாலின் கோஷ்டியின் கை வலுத்து வருவதால் பல முக்கிய அழகிரி ஆதரவாளர்கள் அங்கே தாவிக் கொண்டுள்ளனர். அதேசமயம், எதிர்பாராத வகையில் சில முக்கிய ஸ்டாலின் ஆதரவாளர்கள் அழகிரி பக்கம் போயுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்த வீரபாண்டி ஆறுமுகம்.
அதேபோல இன்னொரு முக்கியமான நபர் நெப்போலியன். இவர் முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரி மகன்தான். ஸ்டாலின் கோஷ்டியுடன் நெருக்கமான நட்பில் இருந்தவர்தான். ஆனால், ஏதோ ஒரு விவகாரத்தில் நேருவுக்கும், நெப்போலியனுக்கும் இடையில் ஆகாமல் போனது. நேரு கோஷ்டியினர், திருச்சியில் நெப்போலியனை புறக்கணிக்க ஆரம்பித்தனர். நேரு தம்பி ராமஜெயம் கொல்லப்பட்ட சமயத்திலும் கூட அஞ்சலி நிகழ்ச்சியில் நெப்போலியனை அவமானப்படுத்தும் வகையிலான நிகழ்வுகளை தொண்டர்கள் கண்டனர்.
இதை ஸ்டாலினும் கண்டு கொள்ளவில்லை. இதனால் வெறுத்துப் போன நெப்போலியன், அழகிரி பக்கம் சாய்ந்து விட்டார். இந்த நிலையில்தான் அழகிரியும், நெப்போலியனும் மற்ற அமைச்சர்களோடு இன்று காலை ராஜினாமா கடிதம் கொடுக்க வராதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால் திமுக தலைமை மீது கொண்ட அதிருப்தியால்தான் அழகிரி உடனடியாக ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கவில்லை, தாமதம் செய்தார் என்கிறார்கள். மேலும் விலகல் முடிவு குறித்து திமுக தலைவர் கருணாநிதி தன்னிடம் ஏதுவும் விவாதிக்கவில்லை என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பினாராம் அழகிரி.
இதனால்தான் அவர் மற்ற அமைச்சர்களோடு போகவில்லை. பின்னர் பிற்பகல் ஒன்ரரை மணிக்கு மேல் நெப்போலியனுடன் பிரதமரைச் சந்தித்து இருவரும் தங்களது ராஜினாமா கடிதங்களைக் கொடுத்தனர்.