ஈழத் தமிழர்களுக்கு மருத்துவ சேவையாற்ற டாக்டர்கள் தயார்- இந்திய மருத்துவ சங்கம்
இதுகுறித்து அவர் தட்ஸ்தமிழுக்கு அளித்த பேட்டியில், இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது இலங்கைப் படையினரால் கிட்டத்தட்ட 1 லட்சத்து 60 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக கொல்லப்பட்டனர். ஈழ பிரச்சினையைப் பொறுத்தவரை போரின்போது, போருக்குப் பிறகு என்ற இரண்டு நிலையாக பார்க்க வேண்டும். போரின்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றால், போருக்குப் பின்னர் அங்கு ஆண்களே இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஈழத்தில் தற்போது 10 வயதுக்கு மேல் 45 வயதுக்குக் கீழான ஆண்களைப் பார்க்க முடியவில்லை. உலகிலேயே அதிக விதவைகளும் வாழும் பகுதியாக ஈழப் பகுதி இன்று மாறியுள்ளது. அங்கு அடிப்படை சுகாதார வசதி எதுவும் இல்லை. ஊனமுற்றோர் அதிக அளவில் உள்ளனர். கிட்டத்தட்ட திறந்தவெளி சிறைச்சாலையில் அடைபட்டிருப்பதைப் போலத்தான் தமிழர்கள் அவல நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இலங்கை ராணுவத்தின் 17 டிவிஷன்களில் 16 டிவிஷன்களைச் சேர்ந்த அதிகாரிகளை அங்கு குவித்து வைத்துள்ளனர்.
அங்கு ஆறு தமிழர்களுக்கு ஒரு ராணுவ வீரர் என்ற நிலை உள்ளது. அங்கு வீட்டில் ஏதாவது சிந்ன விழா நடத்துவதாக இருந்தாலும் கூட ராணுவத்தின் கண்காணிப்பு இல்லாமல் நடத்த முடியவில்லை. இதையெல்லாம் நானாக சொல்லவில்லை. அங்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் பணிக்காக சென்று வந்த எனது நண்பர் கூறியது இது.
அங்கு எந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனமும் பணியாற்ற செல்ல முடியவில்லை. அப்படியே அவர்கள் உதவிகளைக் கொண்டு போனாலும் ராணுவத்தின் மூலமாகவே செய்ய வேண்டிய நிலை. ராணுவத்தைத் தாண்டி எதையும் செய்ய முடியாது. மேலும், கொண்டு செல்லப்படும் உதவிகள் அப்படியே தமிழர்களை சென்றடைவதில்லை. மாறாக 15 முதல் 20 சதவீத உதவிகள்தான் போய்ச் சேருகின்றன.
எனவே சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுடன் வாழ்ந்து வரும், ஊனமுற்ற, மருத்துவ தேவையை எதிர்பார்த்துள்ள தமிழர்களுக்கு உதவ நாங்கள் அங்கு சென்று குழுவாகப் பணியாற்ற, சேவையாற்ற தயாராக இருக்கிறோம். இதற்கு இந்திய அரசும், இலங்கை அரசும் அனுமதித்தால் உடனடியாக கிளம்பிச் செல்லவும் நாங்கள் தயாராக உள்ளோம்.
எங்களது கோரிக்கையை வலியுறுத்திச் சொல்வதற்காக நாங்கள் இன்று முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதித்து தீர்மானிக்கவுள்ளோம் என்றார் டாக்டர் தங்கவேலு.