சேதி தெரியுமா..இன்று சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம்
திருப்பூர்: உலகம் முழுவதும் மார்ச் 20ம் தேதி சர்வதேச சிட்டுக்குருவிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
சின்னஞ்சிறியப் பறவையான சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை விவசாய நாடான இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே குறைந்து வருகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்த 2010-ம் ஆண்டு முதல் மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
செல்போன் டவர்களின் கதிர்வீச்சு, விளைநிலங்களில் பயன்படுத்தப்படும் வீரியமிக்க பூச்சிக்கொல்லி மருந்துகள், நகரமயமாகி வரும் கிராமங்கள், அதிகரித்து வரும் கான்கிரீட் வீடுகள், ஒலி மாசு உட்பட பல்வேறு காரணங்கள் சிட்டுக்குருவிகளை இல்லாமல் ஆக்கி வருவதாக கூறப்படுகிறது.
வீட்டின் முற்றத்திலும், வாசல்களிலும் சுதந்திரமாக வந்து தானியங்களை கொத்தித்தின்ற பறவையான சிட்டுக்குருவி இனி பாடப் புத்தகத்திலும், படங்களிலும் மட்டுமே இடம்பெறும் நிலைக்கு வந்துள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதை உணர்ந்த டெல்லி அரசு சிட்டுக்குருவியை மாநிலப் பறவையாக அறிவித்துள்ளது.
லண்டன் ஆய்வில் தகவல்
1994-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், லண்டனில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை 75 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாகவும், அதேவேகத்தில் அங்கு செல்போன் டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளதாகவும் நிபுணர் குழுவின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
செல்போன் டவர்களினால் பாதிப்பு
லண்டன் மட்டுமல்லாது பல ஐரோப்பிய நகரங்களிலும், உலகம் முழுவதிலும் செல்போன் டவர்கள்தான் சிட்டுக்குருவியினங்களின் அழிவிற்கு காரணமாக கூறப்படுகிறது.
செல்போன்கள் மற்றும் அதற்கான டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதும் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
நிபுணர் குழுவின் அறிக்கை
சிட்டுக்குருவிகள், பட்டாம்பூச்சிகள் போன்றவை அழிந்து வருவதற்கு செல்போன் டவர்களின் கதிர்வீச்சே காரணம் என கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஆராய, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த 2010 ஆகஸ்ட் 30-ம் தேதி, மும்பை இயற்கை நலச் சங்கத்தின் இயக்குனரான ஆசாத் ரஹ்மானி தலைமையில் 10 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது.
தொல்லை தரும் செல்போன் டவர்கள்
செல்போன் பயன்பாட்டில் உலகிலேயே இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அதாவது, 80 கோடி பேர் செல்ஃபோன்களை பயன்படுத்துகின்றனர். இது, விரைவில் 100 கோடியை எட்டும் என்றும், செல்போன் டவர்கள் தொடர்பாக எந்த கொள்கையும் இல்லாத சூழலில் மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் தொல்லை தரும் வகையில் அவை நிறுவப்பட்டு வருவதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குருவிகளை அழிக்கும் செல்போன் டவர்கள்
இதுபோல், இந்தியாவில் போபால், நாக்பூர், ஜபல்பூர், உஜ்ஜைன், குவாலியர், இந்தூர் உள்ளிட்ட நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் செல்போன் பயன்பாடு அதிகரிப்பால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை மிக வேகமாக சரிவை சந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
குருவியின் முட்டை கூட தப்பவில்லை
மேலும், பஞ்சாப் பல்கலைக்கழத்தின் சுற்றுச்சூழல் துறை ஒரு ஆய்வை மேற்கொண்டதும், அதில், சிட்டுக்குருவிகளின் 50 முட்டைகளை கதிர்வீச்சு எல்லைக்குள் வைத்து சோதித்ததில், அனைத்து முட்டைகளும் பாதிப்பை சந்தித்தது கண்டறியப்பட்டதும், நிபுணர் குழுவின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
செல்போன் டவர்கள் வேண்டாமே
இதனையடுத்து பறவைகள் நிறைந்த பகுதிகள், வனவிலங்கு சரணாலயங்கள் ஆகியவற்றுக்கு அருகே செல்போன் டவர்கள் அமைப்பதை தீவிரமாக கட்டுப்படுத்த வேண்டும் என இந்த குழு மத்திய அரசுக்கு சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது.
வனத்துறை அனுமதி வேண்டும்
மேலும், இத்தகைய பகுதிகளில் செல்போன் டவர்களை அமைக்க வனத்துறையிடம் ஆலோசனை பெறவேண்டும் என்றும், எந்த பகுதிகளில் டவர்களை நிறுவுவதாக இருந்தாலும் பொதுமக்களின் கருத்தைப் பெறுவது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக கதிர்வீச்சை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு கிலோ மீட்டருக்கு இடையில் புதியதாக டவர்களை நிறுவ அனுமதி வழங்கக் கூடாது என்றும், நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பும் ஆபத்து
சிட்டுக்குருவிகள் பொதுவாக வீட்டு மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வசித்து வந்தன. இப்போது கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரிப்பால் இன்று நகரங்களில் இருந்து விடைபெறத் தொடங்கிவிட்டன.
சிறுதானியங்கள் இல்லையே
சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும் கம்பு, கேழ்வரகு, சோளம், திணை, சாமை போன்ற சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்டதும், நெல் பயிரிடுதலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதும் சில முக்கியக் காரணங்களாக கூறப்படுகிறது. செல்போன் டவர்களின் பாதிப்புகளை விட இத்தகைய காரணங்களே சிட்டுக்குருவிகளின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
உணவுச்சங்கிலி பாதிக்கும்
மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சி இயற்கையை மட்டுமல்ல, அதனுடன் இணைந்த உயிரினங்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி வருகிறது. சிட்டுக் குருவிகளின் அழிவு, உணவுச் சங்கிலியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதையும் நமக்கு உணர்த்துகின்றன என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
குருவிகளை எப்படி காப்பாற்றலாம்
இயற்கை முறை விவசாயத்தை ஊக்கப்படுத்துவது குருவிகளுக்கு மட்டுமில்லாமல் மனிதர்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும் என்று இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மேலும், வீடுகளில் சிட்டுக்குருவிகள் தங்கும் வகையில் கூடுகளை அமைத்து, அந்த இனத்தை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.