கிங்பிஷரிடம் 'மாட்டிய' விமானங்களை படாதபாடுபட்டு மீட்டுச் செல்லும் நிறுவனங்கள்

கிங்பிஷர் நிறுவனம் உலகின் பல்வேறு விமான நிறுவனங்களிடம் இருந்து பல விமானங்களை குத்தகைக்கு எடுத்துள்ளது. ஆனால், விஜய் மல்லையாவின் நிர்வாகத் திறமையின்மையால் இந்த கிங்பிஷர் நிறுவனமே ஊத்திக் கொண்டுவிட்டது.
6 மாதங்களுக்கு முன்பே இந்த நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுவிட்டாலும், விமானங்கள் de-register செய்யப்படவில்லை. இதனால், இந்த விமானங்களைத் தந்த நிறுவனங்கள் அதை திரும்ப எடுக்க முடியாமல் தவித்து வந்தன.
இது தொடர்பாக ஜெர்மனியின் முக்கிய வங்கியான டிவிபி இந்திய விமானப் போக்குவரத்துறை டைரக்டர் ஜெனரல் மீது வழக்கே தொடர்ந்தது. உலகின் பல்வேறு விமான நிறுவனங்களுக்கும் விமானங்கள் வாங்க கடன் தரும் முக்கிய வங்கி இதுவாகும்.
வழக்குத் தொடர்ந்தும் ஏதும் நடக்காத நிலையில், நேற்று இந்த வங்கியின் அதிகாரிகள் விமானப் போக்குவரத்துறை டைரக்டர் ஜெனரல் அலுவலகத் தலைவர் அருண் மிஸ்ராவைச் சந்தித்து, தங்களது விமானங்களைத் திரும்ப எடுத்துச் செல்ல அனுமதி கோரினர்.
இந் நிலையில் இன்று கிங்பிஷர் நிறுவனத்திடம் உள்ள 15 விமானங்கள் டி-ரிஜிஸ்டர் செய்து விமானப் போக்குவரத்துறை டைரக்டர் ஜெனரல் அலுவலகம் உத்தரவிட்டது.
இந்த வங்கிக்குச் சொந்தமான இரு விமானங்கள் ஏற்கனவே துருக்கிக்கு ரிப்பேருக்கு அனுப்பப்பட்டு, அங்கேயே இந்த வங்கியால் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன. ஆனால், இதை வேறு நிறுவனத்துக்கு குத்தகைக்குத் தர இந்திய விமானப் போக்குவரத்துறை டைரக்டர் ஜெனரல் அலுவலகத்தின் அனுமதி தேவைப்பட்டது. இன்று அந்த அனுமதி கிடைத்துவிட்டது.
அதே போல அமெரிக்காவின் விமான குத்தகை நிறுவனமான ILFC கிங்பிஷருக்கு 6 விமானங்களைத் தந்திருந்தது. இதையும் திரும்பப் பெற முடியாமல் தவித்து வந்தது. இன்றைய இந்திய விமானப் போக்குவரத்துறை டைரக்டர் ஜெனரல் அலுவலகத்தின் அனுமதியைத் தொடர்ந்து ஒரு விமானத்தை உடனடியாக இந்த நிறுவனம் கையகப்படுத்திவிட்டது.
முன்னதாக தங்களுக்கு ஏராளமான பாக்கி வைத்துள்ளதால் கிங்பிஷர் விமானங்களை டி-ரிஜிஸ்டர் செய்யக் கூடாது என விமான நிலைய ஆணையம் கூறி வந்தது. ஆனால், குத்தகைக்குத் தந்த நிறுவனங்கள் தந்த நெருக்கடியால் இப்போது அந்த விமானங்களை டைரக்டர் ஜெனரல் ஆணையம் திருப்பி எடுத்துச் செல்ல அனுமதித்துவிட்டது.












Click it and Unblock the Notifications