மன அழுத்தம்.. நகர்ப்புற பெண்களுக்கு மிக இளம் வயதிலேயே மெனோபாஸ்- அதிர்ச்சி ரிப்போர்ட்!
பெங்களூர்: மன அழுத்தத்தினால் நகர்ப்புற பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன என்ற அதிர்ச்சிகரமான செய்தியை ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது. அதாவது மிகவும் இளம் வயதிலேயே பெண்களுக்கு மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய்நிறுத்தம் ஏற்படுகிறதாம்.
தற்போதுள்ள வாழ்க்கைச் சூழலில், ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வது சகஜமாகி உள்ளது.
பணியிலும், குடும்பத்திலும் ஏற்படும் பிரச்சினைகளை சாதுர்யமாகச் சமாளித்து, உயர்ந்த நிலையை அடைய பெண்கள் ரொம்பவே போராட வேண்டியுள்ளது. குடும்பத்தில் பெண் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றாள் என்றால் அது மிகை ஆகாது.
அதிகரிக்கும் மன அழுத்தம்
ஆயினும், அதிகரித்து வரும் மன அழுத்தங்கள் நகர்ப்புறப் பெண்களின் உயிரியல் சுழற்சியான மாதவிடாய்க் காலங்களை குறைக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது எழுந்துள்ளது.
மாதவிடாய் நிறுத்த காலம்
குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன் குறித்து செயல்படும் சத்வம் என்ற அமைப்பானது, கடந்த ஐந்து வருடங்களாக பெண்களின் மாதவிடாய் நிறுத்தக் காலத்தினைப் பற்றி மேற்கொண்ட ஆராய்ச்சியில் பின்வரும் முடிவுகளைத் தெரிவித்துள்ளாது.
25 வயதிலேயே மெனோபாஸ்
ஆராய்ச்சிக்கு கணக்கெடுக்கப்பட்ட 980 பெண்களில், 264 பேர் 40 வயதுக்கு மேலும், 216 பேர் 35-40 வயதுக்குள்ளும், 432 பேர் 30-35 வயதுக்குள்ளும், 68 பேர் 25-30 வயதுக்குள்ளும் இந்த நிலையை எட்டியதாகத் தெரியவந்தது.
தொல்லை தரும் தூக்கமின்மை, கவலை
இது கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததை விட 10 ஆண்டுகள் குறைவான காலகட்டத்தைக் குறிக்கின்றது. இதனால் பெண்கள் மனநிலை மாறுபாடுகள், மன அழுத்தம், கவலை, தூக்கமின்மை போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றார்கள்.
பணிபுரிபவர்களுக்கே அதிக சிக்கல்
இவர்களில் 42 சதவிகிதத்திற்கும் மேலானோர் பணிபுரிபவர்களாக இருக்கின்றனர். இந்த மாதவிடாய் சுழற்சி நிறுத்தம், இவர்களுக்கு தங்கள் தொழிலிலும், வாழ்க்கையிலும் மேலும் பிரச்சனைகளை உருவாக்கக்கூடும் என்று இந்த அமைப்பின் இயக்குனரும், இயற்கை மருத்துவருமான டாக்டர் தீபக் ஷா தெரிவிக்கின்றார்.
குழ்நதைப்பேறின்மையும் ஏற்படுகிறது
நகர்ப்புற வாழ்க்கை முறைகள், மன அழுத்தத்தை அதிகரிப்பதால் இந்தப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் குழந்தைப்பேறின்மை போன்ற கவலைகள் ஏற்படக்கூடும். ஆனால், வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நவீன மருத்துவத் தொழில்நுட்ப உதவியுடன், இந்தக் குறைகளை நீக்கமுடியும் என்று மணிப்பால் மருத்துவமனையின், தாய்மை மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் காயத்ரி கார்த்திக் குறிப்பிடுகின்றார்.