சுப்ரீம் கோர்ட் உத்தரவு- நீரா ராடியாவின் 5,800 டேப் உரையாடல்களை ஆராய்கிறது சிபிஐ!
கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் 16-ந் தேதியன்று அரசியல் தரகரான நீரா ராடியா மீது நிதி அமைச்சகத்துக்கு ஒரு புகார் சென்றது. 9 ஆண்டுகளுக்குள் ரூ300 கோடி மதிப்பிலான ஒரு பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தை அவர் உருவாக்கியிருக்கிறார் என்பதுதான் அப்புகார். இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை நீரா ராடியாவை கண்காணிக்கத் தொடங்கியது. கடந்த 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ந் தேதி முதல் தொடர்ச்சியாக 60 நாட்கள் நீரா ராடியா யார் யாருடன் தொலைபேசியில் பேசினாரோ அனைத்து விவரங்களையும் ஒட்டுக் கேட்டு பதிவு செய்தது வருமான வரித்துறை. அதன் பின்னர் அதே ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி முதல் 60 நாட்கள் மீண்டும் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்களை வருமான வரித்துறை மீண்டும் பதிவு செய்தது. பின்னர் 2009ம் ஆண்டு மே 11-ந் தேதி முதல் மேலும் 60 நாஅட்களுக்கு அவரது உரையாடல் மறுபடியும் பதிவு செய்யப்பட்டது. 180 நாட்கள் பதிவு செய்ய இந்த டேப்களின் மொத்த எண்ணிக்கை 5800.
இவற்றில் சிலவை ஊடகங்களில் கசிந்து அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அமைச்சர் பதவி முதல் தொழில்கள் தொடங்குவதற்கான அனுமதி, லைசன்ஸ் போன்றவற்றுக்காக நீரா ராடியாவுடன் பல மிக முக்கிய அரசியல் தலைவர்கள் பேசியது அம்பலமானது. இதைத் தொடர்ந்து நீரா ராடியா டேப் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கை கடந்த பிப்ரவரி மாதம் விசாரணை செய்த உச்சநீதிமன்றம், நீரா ராடியா டேப் விவகாரம் தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மத்திய அரசை சாடியது. இதைத் தொடர்ந்து 4 மாதங்களுக்குள் நீரா ராடியா டேப் விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து 6 பேர் கொண்ட சிபிஐ குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் இன்று நீரா ராடியாவின் உரையாடல்கள் அடங்கிய 5800 டேப்களை ஆராயத் தொடங்கியிருக்கின்றனர். இரண்டு மாதம் இந்த ஆய்வை மேற்கொண்டு இதில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது குற்றச் செயல்களுக்கு தொடர்பிருக்கிறதா என்பது பற்றி கண்டறிந்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ குழு அறிக்கை தாக்கல் செய்யும்.