காவிரி ஆற்றின் குறுக்கே மீண்டும் மணல் மூட்டை தடுப்பணை கட்டிய கர்நாடகா!
மேட்டூர்: காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மணல் மூட்டை தடுப்பணை அமைத்து இருப்பது தமிழக விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீ மாதேஸ்வரன் மலை குடிநீர் திட்டத்திற்காக தமிழக எல்லையான பாலாறு அருகே கர்நாடக அரசு பிரமாண்டமான நீர் உந்து நிலையத்தை அமைத்து வருகிறது. இந்த நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்ட இடத்தில் தற்போது காவிரி ஆற்றை குறுக்கிட்டு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் போக்கை திருப்பி மாதேஸ்வரன் மலை குடிநீர் திட்டத்திற்கு குடிநீரை எடுக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு உள்ளது.
ஏற்கனவே இந்த பகுதியில் காவிரியாற்றை குறுக்கிட்டு மண் தடுப்பணை அமைக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டது. அப்போது தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் மூலம் அந்த முயற்சி உடனடியாக தடுக்கப்பட்டது.தற்போது கர்நாடக அரசு மீண்டும் தடுப்பணை அமைத்து உள்ளது. இப் புதிய மணல்மூட்டை தடுப்பணை மூலம் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனை உடனே தடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications