ஒவ்வொரு சுவாசமும் ஒரு ரகம்.. கைரேகை மாதிரி- ஆய்வில் தகவல்
மனிதர்களின் கைரேகை மட்டுமல்ல சுவாசம் கூட தனித்தன்மையானதுதான் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அந்த சுவாசத்தை பரிசோதனை செய்து நோயின் தன்மையை அறிந்து கொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சாதாரண காய்ச்சல் வந்தால் தமிழக அரசு மாத்திரையை விழுங்கி நோயை போக்கிய காலம் மலையேறிவிட்டது. மூன்று நாட்களுக்கு மேற்பட்ட காய்ச்சல் என்றால் ரத்தப் பரிசோதனை, மலம், சிறுநீராக பரிசோதனை என்று எடுத்து என்ன நோய் என்று அறிந்து அதற்கேற்ப மருந்து கொடுக்கின்றனர் மருத்துவர்கள்.
அதையும் மீறிப் போனால் ஸ்கேன், எக்ஸ்ரே, ஈசிஜி என எடுத்து ஆயிரக்கணக்கில் மொய் எழுதிவிட்டுதான் வரவேண்டும். இன்றைக்கு நோய்களை கண்டறிய எளிய முறை ஒன்றை கண்டறிந்துள்ளனர். நாம் விடும் மூச்சுக்காற்றை பரிசோதனை செய்து நோய்களை கண்டறியலாமாம்.
சுவாசமும் தனி அடையாளம்
ஜூரிக்கிலுள்ள ஸ்விஸ் ஃபெடரல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் ஆய்வாளர்கள், மூச்சு வெளியேறும் போது, அதிலிருந்து வெளிவரும் இராசயனப் பொருட்களை ஆய்வு செய்தனர். மூச்சுக்காற்றிலிருக்கும் பொருட்கள் ஒவ்வொரு தனி நபருக்கு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும் எனவும், அது எப்பொழுதும் மாறாது எனவும் கண்டறிந்துள்ளனர்.
துல்லியமான பரிசோதனை
மொத்தத்தில் ஒரு மனிதரின் மூச்சுக்காற்றை பரிசோதனை செய்வதன் மூலம் அவருக்கு என்ன நோய் இருக்கிறது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என ஸ்விட்சர்லாந்து நாட்டின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
உடலியல் தன்மைகளை அறியலாம்
மேலும் மூச்சுக்காற்றை பரிசோதனை செய்வதன் மூலம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடலியல் தன்மைக்கேற்ப, தனிப்பட்ட முறையில் மருத்துவ முறைகளை வடிவமைக்க முடியும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
புற்றுநோய்களை கண்டறியலாம்
இதுவரை இந்த சோதனை மூலம் கான்சர் போன்ற நோய்களை அடையாளம் காண முடிந்தது குறிப்பிடத்தக்கது!
ஊக்கமருந்து பரிசோதனை
விளையாட்டுப் போட்டியில் பங்கு பெறுபவர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியுள்ளர்களா என்று பார்க்கவோ, அல்லது ஒரு நோயாளிக்கு எந்த அளவுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்பதை கணிக்கவோவும் இந்த மூச்சுகாற்று பரிசோதனை செய்தாலே போதும் எனும் நிலை ஏற்படக் கூடுமாம்.