பவர் ஸ்டாருக்கு 2வது 'லட்டு'...மதுரையிலிருந்து ஒரு பிடிவாரண்ட்.. இதுவும் செக் மோசடிதான்!
சமீபத்தில்தான் நாமக்கல் தொழிலதிபர் ஒருவர் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் அவருடன் சமரசம் செய்து, பணத்தை செட்டில் செய்து, கைது நடவடிக்கையிலிருந்து தப்பி்ப் பிழைத்தார் பவர் ஸ்டார்.
தற்போது அவரை நோக்கி மதுரையிலிருந்து ஒரு பாசவலையை வீசியுள்ளனர். அந்த விவரம் இதோ...
மதுரை, பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவருடைய மகன் கணேஷ்குமார். இவரிடம் கடந்த 3.11.2011 அன்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் அவருடைய சொந்த தேவைகளுக்காக ரூ.9 லட்சம் கடன் வாங்கினாராம். அந்த பணத்தை ஒரு சதவீத வட்டியுடன் 2 மாத காலத்திற்குள் திரும்ப தருவதாக கூறினார்.
இதனை நம்பிய கணேஷ்குமார் பணத்தை கொடுத்தார். ஆனால் சீனிவாசன் வட்டியையும் தரவில்லை, அசலையும் திரும்ப கொடுக்கவில்லை. பின்னர் பவர் ஸ்டார் சீனிவாசன் 3.1.2012 தேதியிட்டு அவரது வங்கி கணக்கில் இருந்து செக்கை கொடுத்தார். கணேஷ்குமார் அதை அவரது கணக்கில் செலுத்தியபோது, போதிய பணம் இருப்பில் இல்லை என்று கூறி திரும்பி வந்தது.
இதையடுத்து சீனிவாசனுக்கு எதிராக கணேஷ்குமார் மதுரை 2-வது விரைவு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது பலமுறை சீனிவாசன் ஆஜரகவில்லை.
இந்த நிலையில் விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளி வைத்த மாஜிஸ்திரேட் (பொறுப்பு) வி.இருதயராணி, பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
வக்கீலை மதுரைக்கு அனுப்பி கணேஷ்குமாருக்கு பணத்தை செட்டில் செய்து பவர் ஸ்டார் மீளுவார் என்ற திடமான நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.