ஆடம்பர செல்போன் வாங்கித் தராததால் கோவை கல்லூரி மாணவி தற்கொலை
கோவை: விலை உயர்ந்த செல்ஃபோன் வாங்கித் தர மறுத்ததால், மனமுடைந்த கல்லூரி மாணவி, தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை ஆர்.எஸ்.புரம், டி.கே.வீதி, பட்டுநூல்கார வீதியைச் சேர்ந்தவர் நகைப் பணியாளர் கே.முருகன் (46). இவரது ஒரே மகள் நாகநந்தினி (19). பீளமேடு, கொடிசியா அருகில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வந்தார். இந் நிலையில், தனது கல்லூரியில் சக மாணவ, மாணவியர் வைத்திருப்பதுபோல ரூ.37,000 மதிப்புள்ள புதிய மாடல் செல்ஃபோன் வாங்கித் தருமாறு நாகநந்தினி தனது தந்தையிடம் கேட்டுள்ளார்.
பணம் கிடைக்கும்போது வாங்கித் தருவதாகக் கூறி முருகன் காலம் கடத்தினாராம். இதனால், மனமுடைந்த நாகநந்தினி புதன்கிழமை காலையில் வீட்டில் தூக்குப் போட்டு த்ற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்குப் போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ரேஸ்கோர்ஸ் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகநந்தினி உயிரிழந்தார்.
இதுகுறித்து, ஆர்.எஸ்.புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.